ஆப்நகரம்

அரியலூர் பகுதியை ஆட்டிப் படைக்கும் போலி மருத்துவர்கள்; தொடரும் கைது நடவடிக்கை!

அரியலூர்: போலி மருத்துவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.

Samayam Tamil 10 Nov 2018, 2:51 pm
அரியலூர் மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
Samayam Tamil Fake doctors


இந்தச் சமயத்தில் மெடிக்கல் நடத்துபவர்கள், ஹோமியோபதி படித்தவர்கள் ஆங்கில மருத்துவத்தில் சிகிச்சை அளிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன.

உடனே மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் வருவாய் துறை, மருத்துவத் துறை, காவல்துறையினர் ஒன்றிணைந்து பல்வேறு பகுதிகளில் ஆய்வில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ராயம்புரம், குழுமூர், மீன்சுருட்டி, காட்டத்தூர், உட்கோட்டை, பிலாக்குறிச்சி உள்ளிட்ட 9 பகுதிகளில் மெடிக்கல் நடத்துபவர்கள் மற்றும் ஹோமியோபதி படித்தவர்கள் வைத்தியம் பார்ப்பது கண்டறியப்பட்டது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், உரிய அனுமதி பெறாமலும் உரிய தகுதியின்றியும் மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுகளத்தூரைச் சேர்ந்த பழனியாண்டி, மீன்சுருட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், சுப்பிரமணியன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனே அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. யாரும் மெடிக்கலுக்கு சென்று மருந்து மாத்திரைகளை வாங்கி உண்ண வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி