ஆப்நகரம்

ஸ்தம்பித்தது தமிழகம்: ஏராளமானோர் கைது

காவிரியில் நீர் திறந்துவிடும் கோரிக்கையை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் நடத்தி வரும் போராட்டத்தால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. மேலும், ஆங்காங்கே கைது நடவடிக்கைகளிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

TNN 30 Aug 2016, 11:49 am
சென்னை: காவிரியில் நீர் திறந்துவிடும் கோரிக்கையை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் நடத்தி வரும் போராட்டத்தால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. மேலும், ஆங்காங்கே கைது நடவடிக்கைகளிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
Samayam Tamil farmers protest arrest in different places in tamilnadu
ஸ்தம்பித்தது தமிழகம்: ஏராளமானோர் கைது


சம்பா சாகுபடி மேற்கொள்வதற்கு காவிரியில் கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெற்றுத் தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துதல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், தமாகா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழர் தேசிய முன்னணி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

முன்னதாக, கடந்த 25-ம் தேதியன்று போராட்டம் நடைபெறவிருந்தது. ஆனால், அன்றைய தினம் விடுமுறை நாள் என்பதாலும், பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்க இயலாது என்பதாலும் போராட்ட தேதி 30-ம் தேதிக்கு (இன்று) மாற்றப்பட்டது.

அதன்படி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ரயில் மறியல்கள் உள்ளிட்ட போராட்டங்கள் நடைப்பெற்று வருகிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சத்தியமங்கலத்தில் 200 சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக பேருந்துகள் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இருப்பினும், வெகுண்டெழுந்த விவசாய சங்கங்களும், அதற்கு ஆதாரவு தெரித்துள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் போராட்டத்தால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையம், தாம்பரம் ரயில் நிலையம், கோவை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபடுபவர்களை காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர்.

முன்னதாக, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தேவையான 50.02 டிஎம்சி தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடாகா மாநிலத்துக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு சார்பில் இடைக்கால மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி