ஆப்நகரம்

போலீசிடம் தப்பி கிணற்றுக்குள் விழுந்த கொள்ளையன்!!

அம்பத்தூரில் திருட்டில் ஈடுபட்டு தப்பி செல்லும் போது கிணற்றில் தவறி விழுந்து மாட்டிக்கொண்ட திருடனை போலீசார் 2 நாட்கள் கழித்து மீட்ட ச ம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 2 Jan 2019, 3:16 pm
அம்பத்தூரில் திருட்டில் ஈடுபட்டு தப்பி செல்லும் போது கிணற்றில் தவறி விழுந்து மாட்டிக்கொண்ட திருடனை போலீசார் 2 நாட்கள் கழித்து மீட்ட ச ம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூர், இந்தியன் பேங்க் காலனி, 2வது தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (40) தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 28ந்தேதி குடும்பத்துடன் தஞ்சாவூர் சென்று நேற்று முன்தினம் அதிகாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை செயலில் ஈடுபட்டு இருந்தனர்.

சத்தம் கேட்டு எழுந்து வந்த அக்கம்பக்கத்தினர் அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இரவு ரோந்து போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, அங்கு கொள்ளையில் ஈடுபட்டு இருந்த மூவர் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டினர். அவர்கள் மூவரும் போலீசாரின் பிடியில் சிக்காமல் தப்பி ஓடினர்.

இதற்கிடையில், நேற்று முன்தினம் வீடு திரும்பிய விஜயகுமார் வீட்டை சோதனை செய்தபோது வீட்டில் இருந்து ரூ 10,000 ரூபாய் பணம் கொள்ளை போனது தெரிய வந்தது. விஜயகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியம் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்தவர்கள் தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை அம்பத்தூர், சந்திரசேகரபுரம், 2வது தெருவில் வசிக்கும் கோபாலகிருஷ்ணன் (50) என்பவரது வீட்டுக் கிணற்றில் மர்ம நபர் ஒருவரின் முணங்கல் சத்தம் வந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

கிணற்றில் இருந்த நபரை மீட்டனர். அவருக்கு கை முறிவு, காலில் காயம் ஏற்பட்டு இருந்ததை அடுத்து போலீசார் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர். பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில், தப்பிச் சென்ற மூன்று கொள்ளையர்களில் அவரும் ஒருவர் என்பது தெரிய வந்தது.

அந்தக் கொள்ளையன் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, பெத்தானிலியன் கார்டன், சிமெண்டரி சாலையை சேர்ந்த ஜான் ஜெய்சிங் (44 )என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இவர் மீது வண்ணாரப்பேட்டை ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 3 கொலை வழக்குகள் உள்பட 22 வழக்குகள் உள்ளன என்பது தெரியவந்தது. அவரை அம்பத்தூர் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி