ஆப்நகரம்

சென்னையில் புதிய தொழில்நுட்பத்தில் வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு அறிமுகம்!

சென்னையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு அறிமுகம் செய்யப்பட்டது.

Samayam Tamil 19 Sep 2018, 7:05 pm
சென்னையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு அறிமுகம் செய்யப்பட்டது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
Samayam Tamil flood alert


சென்னை வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு (CFLOWS) என்பது சென்னை பெருநகர வெள்ள அபாய மேலாண்மையில் சரியான நடவடிக்கை / முடிவுகள் மேற்கொள்ள உதவி புரியும் தொழில்நுட்பம் ஆகும். மேற்படி அமைப்பு தேசிய கடலோர ஆராய்ச்சி மையம், இந்திய தொழில் நுட்ப மையம் சென்னை (IIT - M), இந்திய தொழில்நுட்ப மையம் மும்பை (IIT - B) மற்றும் அண்ணா பல்கலைகழகத்தின் தொலை உணர்வு நிறுவனம் (IRS) ஆகியவை கூட்டாக வடிவமைத்தது.

மேற்படி, அமைப்பு சென்னையில் ஏற்படக்கூடிய வெள்ள அபாய நிலையினை மழையளவு, கடல் அலை வேகம், ஆறுகள் மற்றும் நீர் தேக்கங்களின் நீரின் அளவுகள் மற்றும் இன்னும் பிற புள்ளி விவரங்களின் அடிப்படையிலான நீரியக்க விசை சார்ந்த தொழில் நுட்பத்தின் ((hydro dynamic model) அடிப்படையில் கணிக்கும். இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் அதிநவீன முன்னெறிவிப்பு கருவிகளின் துணை கொண்டு 5 நாட்களுக்கு முன்பாகவே ஏற்படக்கூடிய வெள்ள அபாயம் மற்றும் அதனின் உயரம், பாதிக்கப்படக்கூடிய இடம் போன்ற விவரங்களை இவ்வமைப்பின் மூலம் கண்டறிய இயலும். அபாய காலங்களில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பது, பாதிக்கப்படக்கூடிய மக்கள் மற்றும் சொத்துகளை கண்டறிவது, மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கையை தீர்மானிப்பது, நிவாரப்பணிகளை மேற்கொள்வது போன்ற முடிவுகள் மேற்கொள்ள பெரிதும் உதவி புரியும். மேற்படி, அமைப்பு நடப்பாண்டின் வடகிழக்கு பருவமழை காலங்களில் TNSMARTஅமைப்புடன் இணைந்து பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இவ்வமைப்பின் மூலம் பெறப்படும் முன்னெச்சரிக்கை தகவல்கள் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு TNSMART அமைப்பின் மூலம் வழங்கப்படும். கூடுதல் தலைமை செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் கீழ் இயங்கும் இண்சிடன்ட் ரெஸ்பான்ஸ் அமைப்பின் ((Incident Response System) அனைத்து அலுவலர்களும் இந்த சென்னை வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு (CFLOWS)-ஐ பயன்படுத்துவர்.

இதுதொடர்பான, புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று 19.09.2018, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர். பி. உதயக்குமார் முன்னிலையில் கூடுதல் தலைமை செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், மற்றும் தேசிய கடலோர ஆராய்ச்சி மைய இயக்குநர் எம். வி. ரமண மூர்த்தி ஆகியோருக்கு இடையே கையொப்பம் ஆனது. இந்நிகழ்ச்சியில், அரசு முதன்மை செயலர் / வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முனைவர் அதுல்யா மிஸ்ரா, ஆணையர், பேரிடர் மேலாண்மை இராஜேந்திர ரத்னூ, மற்றும் வருவாய் இணை ஆணையர், எம். லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி