ஆப்நகரம்

5000 ரூபாய் ஏன் தரல..? யார் வீட்டு துட்டு அது..? திமுகவை விளாசிய ஜெயக்குமார்

பொங்கல் பரிசு தொகையாக திமுக அரசு 5 ஆயிரம் ரூபாய் தரவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடினார்.

Samayam Tamil 24 Dec 2022, 3:29 pm
முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான டாக்டர் எம் ஜிஆரின் 35ம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது . பல்வேறு இடங்களில் தலைவர்கள் எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
Samayam Tamil jayakumar


இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது; திமுக ஆட்சி மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தி உள்ளது என கூறினார். தொடர்ந்து பேசியவர், பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 5,000 ஏன் தரவில்லை? நாடாளுமன்ற தேர்தல் வரும் காரணத்தால்தான் 1000 ரூபாய் கூட தருகிறார்கள். போனால் போகட்டும் என்று 1000 ரூபாயை கொடுத்திருக்காங்க. யார் வீட்டு காச கொடுக்கிறீங்க? உங்க வீட்டு துட்டயா எடுத்து கொடுக்குறீங்க? என ஜெயக்குமார் ஆவேசமானார். அதனை தொடர்ந்து பேசிய ஜெயக்குமார்,

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்படுகிறது. சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமில்லை. எந்த நிலைமையிலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். கூட்டணியில் இடம்பெறுபவர்களுக்கு அதிமுகதான் இடம் ஒதுக்கும். அதிமுக கூட்டணியில் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரனை இணைக்க மாட்டோம்" என இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிகள் திட்டமிட்டிருந்தனர். ஒரே நேரத்தில் இரண்டு அணிகளும் வந்த மோதல் ஏற்படலாம் என்று இரு அணிகளுக்கும் தனி தனியே நேரம் ஒதுக்கப்பட்டது. முதலில் ஈபிஎஸ் அணியினர் வந்து மாலை அணிவித்து சென்ற பிறகு ஓபிஎஸ் அணியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றனர்.

அடுத்த செய்தி