ஆப்நகரம்

முடிசூடிய உதயநிதி; கைவிடாத தலைமை- வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு புதிய பொறுப்பு!

முன்னாள் இளைஞரணி செயலாளராக இருந்த வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு திமுக புதிய பொறுப்பு வழங்கியுள்ளது.

Samayam Tamil 4 Jul 2019, 5:14 pm
திமுக வரலாற்றில் இன்று பொன்னான நாள் என்று தான் சொல்ல வேண்டும். அக்கட்சிக்கு மு.க.ஸ்டாலின் வாரிசு உதயநிதி, இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதனை தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
Samayam Tamil SAMINATHAN


திமுகவில் இளைஞரணி செயலாளர் என்ற பதவி கருணாநிதியால் உருவாக்கப்பட்டது. அந்தப் பதவியில் 32 ஆண்டுகளாக மு.க.ஸ்டாலின் இருந்து வந்தார். துணைச் செயலாளராக வெள்ளக்கோவில் சாமிநாதன் இருந்தார்.

இதையடுத்து 2017ல் திமுக செயல் தலைவராக ஸ்டாலின் உயர்வு பெற்றார். இதையடுத்து இளைஞரணி செயலாளர் பதவிக்கு வெள்ளக்கோவில் சாமிநாதன் நியமிக்கப்பட்டார்.

இரு ஆண்டுகள் ஆன நிலையில், கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் தனது மகன் உதயநிதியை, இளைஞரணி செயலாளர் பதவிக்கு ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் திமுக சார்பில் நடைபெற்ற கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த தேர்தலிலும் திமுகவிற்காக உதயநிதி தீவிரமாக உழைத்தார். இவற்றை கண்ட பிறகு தான், ஸ்டாலின் அதிரடி முடிவு எடுத்துள்ளார். இதற்கு வழிகொடுக்கும் வகையில் வெள்ளக்கோவில் சாமிநாதன் தனது ராஜினாமா கடிதத்தை மேலிடத்திற்கு அனுப்பி வைத்தார்.

அவர் விடுவிக்கப்பட்டு, இன்று உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக நியமித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு கட்சியில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

வெள்ளக்கோவில் சாமிநாதன் திருப்பூர், வெள்ளக்கோவில் ஆகிய தொகுதிகளில் எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். திமுக ஆட்சியில் நெடுஞ்சாலை மற்றும் பராமரிப்புத் துறை அமைச்சராக இருந்தவர்.

அடுத்த செய்தி