ஆப்நகரம்

2015ம் ஆண்டை போல இந்த முறை இருக்குமா? ரமணன் கூறுவது இதுதான்...

தமிழகத்தில் தற்போது பெய்து வரும் தொடர் மழையை குறித்து முன்னாள் வானிலை இயக்குனர் ரமணன் கருத்து

Samayam Tamil 7 Nov 2021, 1:18 pm
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வரக்கூடிய 9ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்


மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து தமிழக கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்றும் அதன் காரணமாக, வட தமிழக கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கன மழை பெய்யக் கூடிய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. சாலைகளிலும் வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளதால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னைக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு படையினர் தயாராக உள்ளனர்.

கனமழை பாதிப்பு.. தமிழகம் விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!

இதனிடையே சென்னை முன்னாள் வானிலை இயக்குனர் ரமணன் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 2015 இல் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதத்தில் 53 விழுக்காடு மழை பெய்தது. ஆனால், வழக்கமாக 44 விழுக்காடுதான் பதிவாக வேண்டும். தற்போது பெய்து வரும் மழையின் அளவானது நேற்று வரையில் 40 விழுக்காடு பெய்துள்ளது. இது 2015ஐ விட அதிகமா என்பதை டிசம்பர் 31 அன்றுதான் முடிவு செய்ய முடியும். அடுத்தடுத்து நிகழ்வுகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். நேற்று பெய்த மழை இன்று குறையலாம். படிப்படியாக குறைந்து கொண்டே செல்லலாம். வங்க கடலில் மேலடுக்கு சுழற்சிதான் காணப்படுகிறது. புயல் வாய்ப்பு என்றால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வேண்டும். இன்னும் சில நாட்களில் புயலுக்கான சூழல் உருவாகலாம்'' என இவ்வாறு ரமணன் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி