ஆப்நகரம்

ஏழைகளின் 19 டன் ரேஷன் அரிசி பதுக்கல்: திருவண்ணாமலையில் இமாலய மோசடி

திருவண்ணாமலை அருகே 19 டன் ரேஷன் அரிசி பதுக்கிய நான்கு நபர்கள் கைது.

Samayam Tamil 7 Sep 2021, 8:31 pm
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரேஷன் அரிசி பதுக்கல் ரகசிய தகவலின் படி, மாவட்ட தனிப்படை காவலர்கள், திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, வள்ளிவாகை புதூர் கிராமத்தில் சோதனை செய்தனர்.
Samayam Tamil கோப்புப்படம்


அப்போது அருணாச்சலம் என்பவரது குடோனில், ஆறுமுகம் (46) என்பவர் சுமார் 45 கிலோ எடையுள்ள 330 மூட்டை தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கும் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்ததும் மற்றும் ரேஷன் அரிசியை TN23 AV 9993 என்ற பதிவெண் கொண்ட டிப்பர் லாரியில் ஏற்றிக் கொண்டிருந்ததும் தெரிய வந்தது.

ரேஷன் அரிசியை பதுக்கிய கீழ்பெண்ணாத்தூர் தாலுக்காவைச் சேர்ந்த ஆறுமுகம், குடோன் உரிமையாளர் சந்திரன் மற்றும் லாரி டிரைவர் ராமு, ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 14,850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து ஆறுமுகத்தை விசாரணை செய்ததில் இருந்து கிடைத்த தகவலை அடுத்து, ஆறுமுகத்தின் அண்ணன் ஏழுமலை என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது, அங்கு 25 கிலோ எடை கொண்ட 170 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

23க்கு 43 உடன் காதல், ஒரே மகளின் திருமண போட்டோவை பார்த்து உயிரை விட்ட பெற்றோர்..!

மேலும் ரேஷன் அரிசியை TN25 F6432 என்ற பதிவெண் கொண்ட டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றி கொண்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஏழுமலையை கைது செய்து அவரிடமிருந்து 4250 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ஒரு டாடா ஏஸ் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

மொத்தமாக கைது செய்யப்பட்ட நான்கு 4 நபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட 19,100 கிலோ ரேஷன் அரிசி, ஒரு டிப்பர் லாரி மற்றும் ஒரு டாடா ஏஸ் வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அடுத்த செய்தி