ஆப்நகரம்

கணவர் முன்பு பெண்ணை கூட்டு வன்கொடுமை செய்த கும்பல்- சென்னை அருகே கொடூரம்

சென்னை அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை போலீஸார் கைது செய்தனர்.

Samayam Tamil 11 Oct 2018, 12:04 pm
கணவருடன் வாகனத்தில் சென்ற பெண்ணை வழிமறித்து, குடிபோதையிலிருந்த நான்கு பேர் தூக்கிச்சென்று கூட்டு வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
Samayam Tamil gummidipoondi-gang-rape-cover-pic
பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேர் கைது


மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணமான தம்பதிகள் இருவர் கோயிலுக்கு சென்றுவிட்டு சென்னை கும்மிடிப்பூண்டியிலிருந்து கடந்த திங்கள், முன்னிரவு 7.30 மணியளவில், இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களை வழிமறித்த நான்கு பேர், தம்பதிகளை தாக்கினர். இதில் படுகாயமடைந்த கணவர், அப்பகுதி வாசிகளை உதவிக்கு அழைத்தார். ஆனால் அதற்குள் அவரது மனைவியை தூக்கிச்சென்ற அந்த கும்பல், கூட்டு வன்கொடுமை செய்தனர்.

இந்நிலையில் அந்த கணவர் உள்ளூர்வாசிகளுடன் சம்பவ இடத்துக்கு வர, அந்த நான்கு பேரும் தப்பியோடினர். இந்த சம்பவம் தொடர்பாக, கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில், அந்த நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது தாக்குதல், தவறாக நடந்து கொள்ளுதல், கூட்டு பாலியல் வன்கொடுமை, பொது இடத்தில் தகாத வார்த்தைகளால் பேசுதல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் தெரிவித்த தகவலின் படி, கைது செய்யப்பட்டவர்களில் மோகன் மற்றும் முனியசாமி இருவரும் கூடை பின்னும் தொழில் செய்து வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மேலும் இருவர் மைனர் என்பதால் அவர்கள் செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 29 வயது ஆகிறது. அவர் ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து பெற்றவர். நான்கு வயது மகனுடன் வசித்து வந்த அப்பெண்ணுக்கு சமீபத்தில் தான் மறுமணம் நடந்துள்ளது. எனினும் இந்த திருமணம் குறித்து கணவர் வீட்டாருக்கு தெரியாது என அப்பெண் தகவல் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி