ஆப்நகரம்

ரெடியாருங்க மக்களே; முடிவுக்கு வரும் ஃப்ரீ டோல்கேட் - இனிமேல் கட்டணம் தான்!

பொதுமக்கள் அடிச்சு காலி பண்ணிய டோல்கேட்டில் விரைவில் கட்டணம் வசூல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 28 Feb 2020, 9:00 am
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அடுத்த பரனூரில் சுங்கச்சாவடி ஒன்று உள்ளது. இங்கு கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி நள்ளிரவு சென்னை கோயம்பேட்டில் இருந்து அரசு பேருந்து ஒன்று வந்தது. அதில் நெல்லை நாங்குநேரியை சேர்ந்த நாராயணன்(38) ஓட்டுநராகவும், அம்பாசமுத்திரத்தை சேர்ந்த பசும்பொன் முத்துராமலிங்கம் நடத்துநராகவும் இருந்தனர். சுங்கச்சாவடிக்குள் பேருந்து வந்த போது, அங்கிருந்த ஊழியர்கள் ஓட்டுநரிடம் கட்டணம் கேட்டுள்ளனர்.
Samayam Tamil Paranur


அதற்கு ஏற்கனவே பாஸ்டேக் எடுத்துவிட்டதாகவும் மீண்டும் எடுக்க முடியாது என்றும் ஓட்டுநர் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனை சுங்கச்சாவடி ஊழியர்கள் ஏற்க மறுத்தனர். இதன் காரணமாக ஓட்டுநருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஓட்டுநரை சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைத் தட்டி கேட்ட நடத்துநரையும் ஊழியர்கள் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த ஓட்டுநர் பிற வாகனங்கள் கடந்து செல்லாதவாறு சுங்கச்சாவடி குறுக்கே பேருந்தை நிறுத்தினார்.

இந்நிலையில் அவ்வழியே வந்த மற்ற பேருந்துகளின் ஓட்டுநர்களும் சுங்கச்சாவடி ஊழியர்களின் செயலை கண்டித்து தங்கள் பேருந்துகளை குறுக்கே நிறுத்தி போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக பல கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

”காட்ஃபாதர் உயிரை பறித்த எமனுக்கு கண்டனம்” - இந்த மதுரைக்காரங்க செஞ்ச வேலையை பாருங்க!

சுங்கச்சாவடி ஊழியர்களின் செயலை கேட்டு ஆத்திரமடைந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனைத்து கவுன்ட்டர்களையும் அடித்து நொறுக்கினர். சிசிடிவி கேமரா, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றையும் சேதப்படுத்தினர்.

சுங்கச்சாவடியில் வசூலான தொகையை சிலர் திருடிச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

மோதல் தொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சுங்கச்சாவடியை சீரமைக்காததால் கடந்த 33 நாட்களாக எந்தவித கட்டணமும் இன்றி வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில் வரும் மார்ச் ஒன்றாம் தேதி முதல் பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் பிரச்சினைகள் ஏதும் நடைபெறாமல் தடுக்க அங்கு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி