ஆப்நகரம்

மதுரை காந்தி மியூசிய ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: நீதிமன்றம் உத்தரவு

டெல்லி காந்தி மியூசியத்தைப்போல மதுரை காந்தி மியூசியத்திலும் பணியாளர்களுக்கும் கூடுதல் சம்பளம் வழங்கவும் மியூசியத்தை பராமரிக்கவும் நிரந்தர வைப்பு நிதிக்கு கூடுதல் தொகை அளிக்க வேண்டும்

Samayam Tamil 20 Mar 2019, 7:17 pm
மதுரை காந்தி மியூசியத்துக்கு நிரந்தர வைப்பு நிதியை அதிகரிக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil gandhi-museum-madurai


1959ஆம் ஆண்டு நாட்டிலேயே முதல் முறையாக மதுரையில் காந்தி மியூசியத்தை அப்போதைய பிரதமர் ஜவகர்லால்நேரு திறந்து வைத்தார். இதற்காக 13.5 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வழங்கியது.

காந்தி பயன்படுத்திய 13 வகையான பொருட்கள், மதுரை காந்தி மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மதுரை காந்தி மியூசியத்துக்கு 1996, 2007 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் மொத்தம் ரூ.5 கோடி நிரந்தர வைப்பு நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதற்குக் கிடைக்கும் வட்டியின் மூலம் காந்தி மியூசியம் செயல்படுகிறது.

பராமரிப்பு மற்றும் பணியாளர்களுக்கான ஊதியம் ஆகியவற்றுக்கு இந்த பணமே பயன்படுகிறது. இந்த வைப்பு நிதிக்கான வட்டி சதவீதத்தை ரிசர்வ் வங்கி அண்மையில் குறைத்துவிட்டது.

இதனால் மதுரை காந்தி மியூசியத்துக்கு வட்டி மூலம் கிடைத்துக்கொண்டிருந்த வருவாய் குறைந்துள்ளது. டெல்லி காந்தி மியூசியத்துக்கும் இதே போன்ற நிலை ஏற்பட, அதைச் சமாளிக்க கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. பணியாளர்களின் சம்பளமும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை கோ.புதூரை சேர்ந்த வடிவேலு என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், டெல்லி காந்தி மியூசியத்தைப்போல மதுரை காந்தி மியூசியத்திலும் பணியாளர்களுக்கும் கூடுதல் சம்பளம் வழங்கவும் மியூசியத்தை பராமரிக்கவும் நிரந்தர வைப்பு நிதிக்கு கூடுதல் தொகை அளிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என். கிருபாகரன் மற்றும் எஸ். எஸ். சுந்தர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய, மாநில அரசுகள் இது குறித்து பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. பின், நீதிபதிகள் இந்த வழக்கை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அடுத்த செய்தி