ஆப்நகரம்

மே 1 கிராம சபைக் கூட்டம்: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மே 1 அன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 28 Apr 2022, 7:25 am
தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான மே 1 ஆம் தேதி கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியன கிராம ஊராட்சி அலுவலகங்களின் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளன.
Samayam Tamil gramma panchayat


என்னென்ன விஷயங்கள் கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்க உள்ளன என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மே 1 (தொழிலாளர் தினம்) அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் கீழ்க்காணும் பொருள்கள் குறித்து விவாதிக்கப்படும். கிராம சபைக் கூட்டங்களில் வரவு செலவு கணக்குகள், பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு மற்றும் அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய கூட்டப் பொருட்கள் உள்ளன.

ஊராட்சிகளின் 2021-22 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, ஒன்றிய மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை, விவசாயம் மற்றும் உழவர் நலத்திட்டங்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் உதவி எண், ஊட்டச்சத்து இயக்கம் (POSHAN ABHIYAN) மற்றும் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
அரசுப் பள்ளிகள் மீது அவதூறு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் ஆசிரியர்கள் சங்கம்!
இவ்வாறு நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் அவ்வூராட்சியில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். மேலும், கிராம சபை விவாதங்களில் பங்கேற்று, பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். கிராம சபைகளில் பொதுமக்கள் கலந்து கொள்ளும்போது உரிய கொரோனா தடுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள்: ஓபிஎஸ், இபிஎஸ் புதிய அறிவிப்பு!
மேலும் கிராம ஊராட்சிகள், தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட கடந்த நிதியாண்டிற்கான வரவு செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்திட வேண்டும். பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ்பேனர் மூலம் வரவு செலவு கணக்கு (படிவம் 30.ன் சுருக்கம்) வைக்கப்பட வேண்டும். கோடை வெயிலின் காரணமாக கிராம சபைக் கூட்டங்கள் காலை 10 மணி அளவில் நடைபெறும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி