ஆப்நகரம்

Chennai Rains: இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கப் போகுது - தமிழகத்திற்கு வானிலை எச்சரிக்கை!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 2 Aug 2020, 6:27 am
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நல்ல மழையை அள்ளித் தந்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பருவமழை தொடக்கத்தில் நல்ல மழைப்பொழிவை அளிக்கவில்லை. ஆனால் படிப்படியாக வேகம் கூடியது. தென் தமிழகத்தில் 13 சதவீதம் கூடுதலாக பருவமழை பெய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் குறுவை சாகுபடிக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
Samayam Tamil Tamil Nadu Rains


இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அளித்த தகவலை இங்கே காணலாம். அதாவது, தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக வடதமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும். மேலும் கோவை, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல், தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கக் கூடும். இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்கக் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். இதனால் சுமார் 3.5 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்பி வரும். குமரி அருகே உள்ள கடல்பகுதிகள் கொந்தளிப்புடன் இருக்க வாய்ப்புள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம்.

இன்று முழு ஊரடங்கு - இந்த விஷயங்களை எல்லாம் மறந்திடாதீங்க தமிழக மக்களே!

தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டமாக காணப்படும். இன்று மாலைக்கு பின் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும். மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய மாநிலங்களில் பருவமழை புரட்டி எடுத்து வருகிறது.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் தீவிர கனமழை பெய்து வருகிறது. கேரள மாநிலத்தின் இடுக்கி, மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. முன்னதாக தென்மேற்கு பருவமழை வரும் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு மாதத்தில் பரவலாக 97 சதவீத அளவிற்கு பருவமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி