ஆப்நகரம்

10 சதவீதம் அல்ல 69 சதவீத இட ஒதுக்கீடு தான்: அமைச்சர் உறுதி

தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு முறைதான் பின்பற்றப்படும் என உறுதியாக கூறியுள்ளார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

Samayam Tamil 11 Oct 2021, 4:01 pm
பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படாது. தமிழகத்தில் இருக்கும் 69 சதவீத இடஒதுக்கீடு முறைதான் முழுமையாக அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil K Ponmudi


இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள் வரும் அக்டோபர் 25ஆம் தேதி முதல் தொடங்கும். கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் 500 இடங்கள் நிரப்பப்படவில்லை. இந்த ஆண்டு அனைத்து இடங்களும் நிரப்பப்படும். மூன்றாவது சுற்று, நான்காவது சுற்று கலந்தாய்வில் 77.5 மதிப்பெண்கள் பெற்றவர்கள் வரை அழைக்கப்படுவர். எனவே நடப்பாண்டை பொறுத்தவரை பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் இருக்காது.

பெரும்பாலும் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இடங்கள் நிரப்பப்படும். தமிழகத்தில் பயோடெக்னாலஜி படிப்பு இல்லை என்று சில செய்திகள் வெளிவந்துள்ளன. அப்படியான சூழல் இல்லை. அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் இருக்கிறது. இந்த படிப்பில் சேர எந்த ஒரு இடத்திலும் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படாது. தமிழகத்தில் இருக்கும் 69 சதவீத இடஒதுக்கீடு முறைதான் முழுமையாக அமல்படுத்தப்படும்.
ஸ்டாலின் போடும் சாதி கணக்கு? அதிமுக விட்ட இடத்தை பிடிக்குமா திமுக?
இதன் அடிப்படையில்தான் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். இந்த படிப்பிற்காக ஒன்றிய அரசு அளிக்கும் உதவித்தொகையை முறையாக வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுத உள்ளார். இந்த உதவித்தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

சமூக நீதியை அமல்படுத்துவதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். எனவே, ஒன்றிய அரசு அனுமதி அளித்தாலும் சரி, அனுமதிக்காவிட்டாலும் சரி, நடப்பாண்டு பயோடெக்னாலஜி படிப்பில் சேர மாணவர் சேர்க்கை நடைபெறும்.
அமைச்சரிடம் தஞ்சம் அடைந்த திமுக எம்.பி: அப்போ, அவரை யார் காப்பாற்றுவது?
தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி, பொறியியல் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது. இந்த திட்டத்திற்கு கிராமப்புற மாணவர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது. எனவே, 7.5 சதவீத இடஒதுக்கீடு விஷயத்தில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது" என்று கூறினார்.

அடுத்த செய்தி