ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு: அலங்காநல்லூர் பேரணியில் ஹிப் ஹாப் தமிழா ஆதி பங்கேற்பு

அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் அமைதிப் பேரணியில் ஹிப் ஹாப் தமிழா ஆதி பங்கேற்றுள்ளார்.

TNN 16 Jan 2017, 11:13 am
மதுரை: அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் அமைதிப் பேரணியில் ஹிப் ஹாப் தமிழா ஆதி பங்கேற்றுள்ளார்.
Samayam Tamil hip hop tamizha adhi participates in jallikattu protest
ஜல்லிக்கட்டு: அலங்காநல்லூர் பேரணியில் ஹிப் ஹாப் தமிழா ஆதி பங்கேற்பு


தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. விலங்குகள் நல வாரியமான பீட்டா அமைப்பினர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், தமிழர்களுக்கு இதுவரை சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. இதனை எதிர்த்து தமிழக அரசு உள்பட அனைவரும் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் இதுவரை எந்த பலனும் இல்லை.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என ஆதரவுக் குரல்கள் தமிழகம் முழுவதும் வலுத்தது. இது தொடர்பான தொடர் போராட்டங்களும் நடைபெற்று வந்தது. ஆனாலும், வழக்கம் போல் இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியது. இதுகுறித்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இந்த முறையும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தடை தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதனிடையே, உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில், தடையை மீறி இன்றைய தினம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், தடையை மீறி போட்டிகளை நடத்த விடாமல் தடுக்கும் பொருட்டு அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேசமயம், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அலங்காநல்லூரில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள கடைகள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும் தங்களது எதிர்ப்பை பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்ற குரல்கள் அங்கு ஒலித்தன.

இந்நிலையில், போலீசாரின் அனுமதியையடுத்து அலங்காநல்லூரில் அமைதிப் பேரணி நடைபெற்று வருகிறது. இந்த பேரணியில் திரைப்பட இசையமைப்பாளரரும், ஜல்லிக்கட்டு ஆர்வலருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி கலந்து கொண்டுள்ளார். மேலும், ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகர், திரைப்பட இயக்குனர் அமீர் உள்ளிட்ட பலர் அந்த அமைதிப் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு குறித்த ஆர்வத்தையும், விழிப்புணர்வையும் பரவலாக பொது மக்களிடையே ஏற்படுத்திய பெருமை ஹிப் ஹாப் தமிழா ஆதியை சாரும். ஜல்லிக்கட்டு குறித்த இவரது "டக்கரு டக்கரு" பாடல் மூலம், ஜல்லிக்கட்டு குறித்த பெருமையையும், அதன் தடைக்கு பின்னணியில் இருக்கும் காரணங்கள் குறித்தும் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இவர் விதைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hip Hop tamizha Adhi participates in Jallikattu protest

அடுத்த செய்தி