ஆப்நகரம்

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எவ்வளவு கட்டணம்? தொடரும் விசாரணை!

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத மாணவர்களுக்கு அரசு கட்டணத்தை வசூலிப்பதற்கு கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

Samayam Tamil 9 Aug 2022, 9:15 am
தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத மாணவர்களிடம் அரசு கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்றால், மீதமுள்ள 50 சதவீத மாணவர்களிடம் 50 முதல் 60 லட்சம் ரூபாய் வரை வசூலிக்க வேண்டி வரும் என, தனியார் மருத்துவ கல்லூரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Samayam Tamil medical student


நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகள், மொத்தமுள்ள இடங்களில் 50 சதவீத இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஸ்ரீ ராமச்சந்திரா, அதிபராசக்தி, பி.எஸ்.ஜி. உள்ளிட்ட நிகர்நிலை பல்கலைக்கழகங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளன.
உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையே போய்விட்டது: கபில் சிபல்
அந்த மனுக்களில், அரசு கல்லூரிகளில் மிக குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுவதாகவும், தனியார் கல்லூரிகள் 50 சதவீத இடங்களுக்கு அரசு கட்டணத்தை வசூலிப்பது என்பது சாத்தியமற்றது எனவும் அப்படி வசூலித்தால் கல்லூரிகளை நிர்வகிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தனியார் மருத்துவ கல்லூரி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 50 சதவீத இடங்களுக்கு அரசு கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவின் கீழ் முதலில் அரசு ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இரு பிரிவு மாணவர்களிடம் இரு வேறு கட்டணம் வசூலிப்பது பாரபட்சமானது. அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்றார்.

18 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கும் அரசு, படிப்பை முடித்தவர்கள் இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய ஒப்பந்தம் செய்கிறது. அரசு கட்டணத்தை வசூலித்து தனியார் கல்லூரிகளை நிர்வகிக்க முடியாது எனவும் விளக்கினார்.

எடப்பாடிக்கு சரியான போட்டி: ஓபிஎஸ் சசிகலாவை முந்தும் தினகரன்

50 சதவீத மாணவர்களிடம் 18 ஆயிரம் ரூபாய் மட்டும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றால், மீதமுள்ள 50 சதவீத மாணவர்களிடம் 50 முதல் 60 லட்சம் ரூபாய் வரை வசூலிக்க வேண்டி வரும் எனவும் குறிப்பிட்டார்.

அதிக வசதிகளுடன் ஒரு கல்வி நிறுவனத்தை துவங்கும் போது, அந்த செலவினங்களை கட்டணம் மூலம் தான் சரிகட்ட முடியும் என்றார்.

வழக்கில் வாதங்கள் நிறைவடையாததால், விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

அடுத்த செய்தி