ஆப்நகரம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு ஏற்பாடுகள் எப்படி? விதிமீறல்கள் இருக்கிறதா?

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் பற்றி தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணனுன்னி பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

Authored byமகேஷ் பாபு | Samayam Tamil | 26 Feb 2023, 12:48 pm

ஹைலைட்ஸ்:

  • நாளைய தினம் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது
  • வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பணிகள் தீவிரம்
  • போலீசார், துணை ராணுவப் படையினர் என பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Erode East ByPoll
Erode East ByPoll
திருமகன் ஈவேரா மறைவால் காங்கிரஸ் கட்சி பெரும் சோகத்தில் மூழ்க ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அடுத்த ஆறு மாதங்களில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மூன்று மாநில சட்டமன்ற தேர்தல் தேதியுடன் திடீர் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து வேட்பாளர்கள் தேர்வு, வேட்புமனு தாக்கல், பிரச்சாரம், பரிசுப் பொருட்கள், வாக்காளர்களுக்கு ரொக்கப் பணம், டோக்கன் என அடுத்தடுத்து அதிரடியான சம்பவங்கள் அரங்கேறின.
தேர்தல் ஆணையம் ஏற்பாடு

ஒருவழியாக நேற்று மாலையுடன் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. இன்றைய தினம் அரசியல் கட்சிகள் கப் சிப் மூடில் இருக்க தேர்தல் வேலைகளில் தேர்தல் ஆணையம் மும்முரம் காட்டி வருகிறது. நாளை காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிருஷ்ணனுன்னி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மண்டல வாரியாக எடுத்து செல்லும் பணிகள் தொடங்கியுள்ளன.
ஈரோடு கிழக்கு: எடுபடுமா கவர்ச்சி அரசியல்? இப்படியும் ஒரு இடைத்தேர்தல்!
போலீஸ் பாதுகாப்பு

இதற்காக மண்டல வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 32 இடங்களில் வாக்குச்சாவடிகள் இருக்கின்றன. ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குச் சாவடி அலுவலர்கள் மூலம் வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பதற்றமான வாக்குச்சாவடிகள் எனக் கண்டறியப்பட்ட இடங்களில் போலீசாருடன், துணை ராணுவப் படையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமீறல்கள்

வரும் மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறையை மீறியதாக இதுவரை 796 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 10 பறக்கும் படை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலி வாக்காளர்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

வாக்காளர் அடையாள அட்டை

நாளைய தினம் வாக்குப்பதிவின் போது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கொண்டு வந்து காண்பித்து வாக்காளர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்யலாம். தேர்தல் ஆணையம் புதிய வழிகாட்டுதல்களை அமல்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன.
கே.சி.பழனிசாமி திடீர் சந்திப்பு; ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பேசியது என்ன?
வேட்பாளர்கள் போட்டி

ஏதேனும் விதிமீறல்கள் தென்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கிருஷ்ணனுன்னி தெரிவித்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் மற்றும் சுயேட்சைகள் களத்தில் இருக்கின்றனர்.

தீவிர முன்னேற்பாடுகள்

மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் இருக்கின்றன. இன்றைய தினம் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் கொண்டு செல்லும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
மகேஷ் பாபு கட்டுரையாளரை பற்றி
மகேஷ் பாபு
செய்தி தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகம் என 8 ஆண்டுகள் அனுபவம். எளிய மக்களின் குரலாகவும், சமூக அவலங்களை சுட்டிக் காட்டும் வகையிலும் எழுதப் பிடிக்கும். அரசியல் செய்திகளை வழங்குவதில் தீராத ஆர்வம் உண்டு. சமயம் தமிழ் ஊடகத்தில் Senior Digital Content Producer ஆக பணியை தொடர்ந்து வருகிறேன்.... Read More

அடுத்த செய்தி