ஆப்நகரம்

நான் நடிகன் அல்ல: யாரை இடிக்கிறார் எடப்பாடி?

விளம்பரம் தேட தான் நடிகன் அல்ல என்றும் தாம் ஒரு விவசாயி என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

Samayam Tamil 7 Sep 2020, 9:41 pm
திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன் புதிய திட்ட பணிகளையும் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ரூ.14.94 கோடி மதிப்பில் 12 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.7.24 கோடி மதிப்பில் முடிவுற்ற 21 திட்டங்களையும் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
Samayam Tamil எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி


இதையடுத்து செய்தியாளார்களை சந்தித்த அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார்.

திருவள்ளூரில் 102 காய்ச்சல் முகாம்கள் உட்பட மொத்தம் 5,108 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் கொரோனா பணிகளுக்கு 37 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில் உள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி: கண்தானம் செய்து முன்னுதாரணமான முதல்வர்

மேலும், மழைநீரை ஒரு சொட்டு கூட வீணடிக்க கூடாது என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.25 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நகரின் ஆற்றின் குறுக்கே ரூ.18 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிகள் பரிசீலனையில் இருக்கிறது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 11 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கிசான் திட்டத்தில் மத்திய அரசின் சலுகைகளில் சில முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், அதனை கண்டறிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக, கண்தானத்தை ஊக்குவிக்கும் வகையில் தனது கண்களை தானம் செய்த முதல்வர் பழனிசாமி, விளம்பரம் தேட நான் நடிகன் அல்ல என்றும், நான் ஒரு விவசாயி என்றும் தெரிவித்தார். நடிகர்கள் பலரும் குறிப்பாக அரசியலுக்கு வருவதாக சொல்லப்படும் ரஜினி, அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வரும் கமல் உள்ளிட்ட பல நடிகர்கள் தங்களது கண்களை தானமாக கொடுத்துள்ள நிலையில், யாரை முதல்வர் குறிப்பிட்டு அப்படி சொன்னார் என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன.

அதேபோல், திமுக தலைவர் ஸ்டாலின் அதிகாலையில் சைக்கிளிங் பயிற்சி மேற்கொண்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஸ்டாலினை ஃபிட்னஸாக காட்டும் முயற்சியாக இந்த படங்கள் வெளியிடப்பட்டதாகவும், பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தின் ஐடியாவின்படி இந்த படங்கள் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டதாகவும் கூறப்பட்டது. பாலத்தின் மீது நின்றபடி, பப்ளிசிட்டிக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை என்று விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், ஸ்டாலினை குறிப்பிட்டு எடப்பாடி விமர்சித்திருக்கலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி