ஆப்நகரம்

என்னிடம் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரின் மதிப்பு 5 லட்ச ரூபாய் தான் - கே.சி. வீரமணி

நான் ஆடம்பரத்தை விரும்பாதவன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 20 Sep 2021, 2:41 pm
அதிமுக ஆட்சியில், வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. இவர் வருமானத்திற்கு அதிகமாக 654% சதவிகிதம் (28.78 கோடி ரூபாய்க்கு) வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Samayam Tamil file pic


கடந்த 16ஆம் தேதி வீரமணி வீடு மற்றும் ஆதரவாளர்கள் மாவட்ட நிர்வாகிகள் என அவருக்கு தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனைகள் நடத்தினர். அந்த சோதனையில் ரோல் ராய்ஸ் உட்பட 9 சொகுசு கார்கள், ரூ.34 லட்சம் ரொக்கம், அமெரிக்க டாலர் இந்திய மதிப்பில் ரூ 1.80 லட்சம், 5 கிலோ தங்கம், 47 கிராம் வைர நகைகள், 7 கிலோ வெள்ளி மற்றும் ரூ 30 லட்சம் மதிப்பிலான 275 யூனிட் மணல் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை விவரம் வெளியிட்டது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த கே.சி. வீரமணி '' லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து பத்திரிகை மற்றும் சமூக ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாகுவதாக அவர் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசியவர் '' நான் ஆடம்பரத்தை விரும்பாதவன். நான் 7ஆம் வகுப்பு படிக்கும்போதே என் தந்தை எனக்கு பென்ஸ் கார் வாங்கிக்கொடுத்தார். சிறு வயதில் இருந்தே நான் வியாபாரம் செய்யும் குடும்பத்தில் இருந்து வருகிறேன்.

ஆகையால் கணக்குகளை எப்படி கையாளுவது குறித்து நன்றாக தெரிந்தவன். என்னிடம் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் 40 ஆண்டுகள் பழமையானது. அதன் மதிப்பு 5 லட்ச ரூபாய் தான். 300 சவரன் நகையை கைப்பற்றியதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியிருக்கிறது ஆனால் அதற்கும் அதிகமாக தேர்தல் பிரமாண பத்திரத்தில் கணக்கு காட்டியுள்ளேன்.

ஆட்சி செய்வது திமுக, அதிகாரம் பண்ணுவது அதிமுகவா?

என்னை போலவே என் மனைவியும் வசதி படைத்தவர். நான் எத்தனையோ பேருக்கு உதவி செய்து வருகிறேன். ஏழை பிள்ளைகளின் படிப்பிற்கு உதவி செய்து வருகிறேன் என்று அனைவரும் தெரியும். ஆகையால், என் மீது உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்ப வேண்டாம்'' என்று கே.சி.வீரமணி கூறினார்.

அடுத்த செய்தி