ஆப்நகரம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: வேல்முருகன் கோரிக்கை!

போக்குவரத்துக்கழகங்களை அதிமுக அரசு சீரழித்துள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 10 Aug 2021, 3:02 pm
2003ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பென்ஷன் வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil velmurugan tvk


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக ஆட்சியில் சீரழிந்துள்ள பொது போக்குவரத்துக்கழகங்களை சீரமைப்பதோடு, தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
நகைக் கடன் தள்ளுபடி, யார் யாருக்கு? வெளியான முக்கிய தகவல்!
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 35 அரசு போக்குவரத்துக்கழங்களில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை மாநகரம், விரைவு போக்குவரத்து சென்னை, விழுப்புரம், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, கோவை, சேலம் ஆகிய 8 அரசு போக்குவரத்துக்கழகங்களில் 20,946 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அரசு போக்குவரத்துக்கழகங்கள் வாயிலாக 60 விழுக்காடுகளுக்கு மேல் பயணத் தேவைகள் பூர்த்தி செய்வதுடன், பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பத்திரிகையாளர்கள், தற்போது பெண்களுக்கு கட்டணமில்லா பயணவசதி ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

கடந்த 10 ஆண்டுகளில் போக்குவரத்துக்கழகங்களை முந்தைய அதிமுக அரசு சீரழித்துள்ளது. போக்குவரத்துக் கழகங்களில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுந்தோறும் 4 ஆயிரம் தொழிலாளர்கள் பணி ஓய்வு பெற்று வருகின்றனர். ஓய்வு வயது 60 என உயர்த்தியதால், கடந்த ஓர் ஆண்டாக ஓய்வு இல்லை.
ஆரம்ப பள்ளிகள் திறப்பு? பள்ளிக் கல்வித்துறை வகுக்கும் வழிமுறைகள்!
அதிமுக ஆட்சியில், பேருந்து வாங்கியதில், உதிரிபாகங்கள் வாங்குவதில், தொழிலாளர் பணியிட மாற்றம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் இலஞ்சம், ஊழல் தலைவிரித்தாடியது. ஓய்வு பெற்ற தொழிலாளிர்களின் பணி ஓய்வு பலன்கள் இன்றளவும் நிலுவையில் உள்ளது. தொழிலாளர்கள் தங்களின் வைப்புநிதியை கூட முந்தைய அதிமுக அரசு சூறையாடியது.

தங்களின் உரிமைக்காக போராடிய தொழிலாளர்களை நசுக்கியது. அவர்களை பணியிட மாற்றம் செய்து அலைக்கழித்தது. ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் செய்தது அதிமுக அரசு. இது போன்று எண்ணற்ற துயங்களுக்கு உள்ளானர்கள் தொழிலாளர்கள்.

இந்த நிலையில், மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தங்களின் பிரச்சினைகளை தீர்க்கும் என்ற பெரும் நம்பிக்கையில் தொழிலாளர்கள் உள்ளனர்.

எனவே, போக்குவரத்துக்கழகங்களை சீரமைக்கவும், 2003-க்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் பென்ஷன் வழங்கவும், போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும், அரசு போக்குவரத்துக்கழகங்களை வலுப்படுத்தவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

மேலும், நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணச்சலுகை, ஓய்வூதியர்கள் நிலுவைத்தொகை ரூ.497.32 கோடியை வழங்கிய மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி