ஆப்நகரம்

அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் கதிரேசன் கொலை வழக்கு: 11 பேரின் ஆயுள் தண்டனை உறுதி!

சிவகங்கையில் அதிமுக நிர்வாகி உட்பட மூவர் கொலை வழக்கில் 11 பேருக்கு தலா மூன்று ஆயுள் தண்டனை வழங்கிய கீழமை நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 22 Mar 2019, 5:08 pm
சிவகங்கையில் அதிமுக நிர்வாகி உட்பட மூவர் கொலை வழக்கில் 11 பேருக்கு தலா மூன்று ஆயுள் தண்டனை வழங்கிய கீழமை நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil admnk.


சிவகங்கையைச் சேர்ந்தவர் கதிரேசன். அதிமுக மாவட்ட மாணவரணிச் செயலராக இருந்தார். கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் 14 அன்று இவர் தனது காரில், மகன் பிரசன்னா (10), மகள் நிகிலா (5) ஆகியோருடன் சென்றுள்ளார். டிரைவர் பூமிநாதன் காரை ஓட்டிச் சென்றார்.

சொந்த ஊரான பகையஞ்சானுக்கு சென்றுவிட்டு இளையான்குடி ஊத்துக்குளி விலக்கு அருகே கார் வந்தபோது கும்பலாக வந்தவர்கள் காரை வழிமறித்து, ஆயுதங்களால் தாக்கியதில் கதிரேன், மகன் பிரசன்னா, கார் டிரைவர் பூமிநாதன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து இளையான்குடி போலீஸார் விசாரணை நடத்தினர். தேர்தல் முன்விரோதத்தில் இந்த கொலை நடந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிவகங்கை நீதிமன்றத்தில் 21 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யபட்டது.

குற்றம்சாட்டபட்ட 21 பேரில் 10 பேரை விடுதலை செய்தும், அர்ஜூனன், அக்னிராஜ், சத்யராஜ், பால்பாண்டி, சிவகுமார், யோகநாதன், விஜயகுமார், சுரேஷ் ( எ) லெனின் குமார், கரந்தமலை, கணேசன், ஜெயகுமார் ஆகிய 11 பேருக்கு தலா மூன்று ஆயுள் தண்டனையும், தலா ரூபாய் 3 ஆயிரம் அபராதமும் வழங்கி 29.09.2015 ல் சிவகங்கை கீழ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆயுள் தண்டனை குற்றவாளிகள் 11 பேரும், தங்களது தண்டனையை ரத்து செய்யகோரி 21.09.2017 ல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தனர். அதேபோல் கீழமை நீதிமன்றம் விடுதலை செய்த 10 பேருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என அரசுதரப்பில் மனுதாக்கல் செய்யபட்டது.

இந்த வழக்கில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கினர். சிவகங்கை கீழ் நீதிமன்றம் குற்றவாளிகள் 11 பேருக்கு வழங்கிய தலா மூன்று ஆயுள் தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். விடுதலை செய்தவர்களுக்கு எதிராக அரசுதரப்பில் தாக்கல் செய்த மனுவினையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி