ஆப்நகரம்

அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு? தமிழக மக்களுக்கு புதிய சிக்கல்!

தொடர் வேலைநிறுத்தம் காரணமாக பல்வேறு பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 6 Dec 2020, 10:23 am
தமிழகத்தில் சரக்கு லாரிகளின் போக்குவரத்து மிகவும் இன்றியமையானது. கொரோனா நெருக்கடி லாரி உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களையும் விட்டு வைக்கவில்லை. இந்த சூழலில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. நாமக்கல்லில் நடந்த இந்த கூட்டத்தில் அனைத்து மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சம்மேளனத் தலைவர் குமாரசாமி, லாரிகளின் தகுதிச் சான்றிதழை புதுப்பிப்பதில் பல்வேறு சிக்கல்கள் நீடிக்கின்றன. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் உற்பத்தியாளர்களே வாகனத்தில் ஜிபிஎஸ் கருவியை பொறுத்தி அனுப்புகிறார்கள். ஆனால் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இதனை ஏற்றுக் கொள்வது இல்லை.
Samayam Tamil TN Lorry Strike


குறிப்பிட்ட நிறுவனங்களின் ஜிபிஎஸ் கருவிகளை வாங்கி பொருத்த வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். அப்படி செய்தால் தான் தகுதிச் சான்றிதழை புதுப்பிக்க முடியும் என்று கூறுகின்றனர். வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை அமல்படுத்த வேண்டும். ஒளிரும் பட்டை ஒட்டுவதில் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியபடி பழையே நிலையே தொடர வேண்டும்.

மேற்கூறிய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், லாரிகளுக்கு பல்வேறு வகைகளை சிரமங்களை அளித்து வரும் போக்குவரத்துத்துறை அதிகாரிகளின் செயல்பாட்டை கண்டித்தும், வரும் 27ஆம் தேதி காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதன்மூலம் தமிழகம் முழுவதும் 5 லட்சம் சரக்கு லாரிகள் ஓடாது.

அரசு பேருந்தில் இலவச பயணம் - தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு!

இதனால் நாளொன்றுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்படும். அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படும். எனவே எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தர அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். நாங்கள் பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண தயாராக உள்ளோம். மேலும் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு முழு ஆதரவு தருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரக் கூடும். பெட்ரோல், டீசல், காய்கறிகள், மளிகை உள்ளிட்ட அனைத்து விதமான பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்களுக்கு பெரும் சுமையாக மாறும். ஏற்கனவே கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விலைவாசி உயர்வு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்.

அடுத்த செய்தி