ஆப்நகரம்

எல்லையில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்: முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் இரங்கல்!

இந்திய - சீன எல்லையில் நடைபெற்ற சண்டையில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம் அடைந்ததற்கு முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்

Samayam Tamil 16 Jun 2020, 4:47 pm
இந்தியா - சீனா எல்லை பிரச்சினை கடந்த சில வாரங்களாக நிலவி வருகிறது. இது தொடர்பாக கடந்த 6ஆம் தேதி இந்தியா- சீனா இடையேயான ராணுவ அதிகாரிகளின் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதால் எல்லையில் இருந்து சீன படைகள் படிப்படியாக திரும்ப பெறப்பட்டு வருகின்றன.
Samayam Tamil ராணுவ வீரர் பழனி
ராணுவ வீரர் பழனி


இதனிடையே, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இரு நாட்டு ராணுவ வீரர்களும் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின் போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது நடைபெற்ற துப்பாக்கி சண்டையின் போது, இந்திய ராணுவ தரப்பில் ஒரு அதிகாரி மற்றும் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களில் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனியும் ஒருவர் என்பது கவனிக்கத்தக்கது.

“ஆயிரம் ரூபா வீட்டிற்கே வரும்” முதல்வர் அறிவிப்பு!

இந்த நிலையில், தமிழக ராணுவ வீரர் வீரமரணம் அடைந்ததற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “லடாக் எல்லை பகுதியில் சீன இராணுவம் தாக்கியதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராமநாதபுரம் - கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழக வீரர் திரு.பழனி அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். வீரமரணம் எய்திய பழனி அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.

அதேபோல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “லடாக்கில் நடந்துவரும் மோதலில் இன்னுயிர் ஈந்த இந்திய இராணுவ வீரர்கள் மூவரின் தியாகத்துக்கு வீரவணக்கம்! 22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி, தனது உயிரையும் ஈந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனியின் குடும்பத்துக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.


சீன ராணுவத்தின் கோழைத்தனமான தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ ஹவில்தார் பழனி உள்ளிட்ட மூன்று பேருக்கும் கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறேன் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளார் டிடிவி தினகரன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி