ஆப்நகரம்

பாளையங்கோட்டை சிறையில் சாதி ரீதியிலான பிரிவினை அறைகள் - முன்னாள் கைதிகள் வேதனை!

சென்னை: தமிழகச் சிறையில் சாதி ரீதியிலான அறைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

TIMESOFINDIA.COM 25 Sep 2018, 3:25 pm
தென் தமிழ்நாட்டில் இருக்கும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சாதி ரீதியிலான அறைகள் இருப்பதாக முன்னாள் கைதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக இந்த வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. தேவர்கள், நாடார்கள், தலித்கள் என தனித்தனியாக அறைகள் பிரிக்கப்பட்டுள்ளன. சிறை வார்டன்களும், காவல்துறையினரும் கைதிகளின் பெயர்களுடன், அவர்களின் சாதிப் பெயரையும் சேர்த்தே அழைக்கும் பழக்கம் வாடிக்கையாக உள்ளது.
Samayam Tamil Central Jail


இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரிகள் கண்டித்தும், யாரும் கண்டுகொள்ளவில்லை என்கின்றனர். பாளையங்கோட்டை சிறையில் 7 ஆண்டுகள் 6 மாதங்கள் தண்டனை அனுபவித்த 40 வயதான முனியப்பன், சாதிரீதியிலான பாகுபாட்டைத் தவிர்க்க வலியுறுத்தி பலமுறை மனு அளித்துள்ளார். வெளியில் இருந்து பார்வையாளர்கள் வரும் போதும், வெவ்வேறு சாதியினரை ஒன்றோடு ஒன்று சேர விடுவதில்லை என்று கூறியுள்ளார். ஆனால் நடவடிக்கை எடுத்தபாடில்லை.

138 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மத்திய சிறையில், தேவர் சமூகத்திற்கு ஒரு வார்டு, தலித்களுக்கு இரண்டு வார்டுகள், நாடார், உடையார் மற்றும் பிற சமூகத்தினருக்கு ஒரு வார்டும் இருக்கிறது. பல ஆண்டுகளாக தேவர் சமூகத்தினர், நல்ல வசதிகளைப் பெற்று வருகின்றனர். ஏனெனில் சிறையில் முக்கிய பதவிகளில் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதுபோன்ற பிரிவினைகள் எதுவும் கிடையாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கூறுகையில், மாநிலத்தின் எந்தவொரு சிறையிலும் இதுபோன்ற பாகுபாடுகள் இருக்கவில்லை. இருப்பினும் இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றார்.

பாளையங்கோட்டை சிறை கண்காணிப்பாளரும் சாதி ரீதியிலான வார்டுகள் ஏதும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். வெவ்வேறு சாதியினர் ஒன்றாக சிறைகளில் இருக்கின்றனர் என்றார். இந்த குற்றச்சாட்டில் உண்மையிருப்பது கண்டறியப்பட்டால் உரிய சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சிறைத்துறை கூடுதல் காவல்துறை இயக்குநர் அஷுதோஷ் ஷுக்லா தெரிவித்துள்ளார்.

Inmates segregated on caste basis in Tamil Nadu jail says Ex-prisoners.

அடுத்த செய்தி