ஆப்நகரம்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்: முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர். மாற்றுத் திறனாளிகளின் தேவைகள் அனைத்தையும் அறிந்து, அவர்கள் மனநிறைவோடு வாழ்ந்திட தமிழ்நாடு அரசின் திட்டங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்திட வேண்டுமென்று முதல்வர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Samayam Tamil 3 Dec 2018, 1:46 pm
இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil stalin_edappadi
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்- தலைவர்கள் வாழ்த்து


உலகளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தினம் டிசம்பர் - 3ம் தேதி 1982ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களுக்கு இணையாக வாழந்திட அரசுப் பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் 4 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்குதல், பேருந்துப் பயணச் சலுகை, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஒளிரும் மடக்கு குச்சிகள், மன வளர்ச்சி குன்றியவர்கள் மாத ஓய்வூதியம் பெறுவதற்கான பாதிப்பு சதவிகிதம் 45 சதவிகிதமாக குறைப்பு; மனவளர்ச்சி குன்றிய/ தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை 1500 ரூபாயாக உயர்த்தியது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 4 மணி நேரப் பணிக்கு முழு நாள் ஊதியம் வழங்குதல், பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித வீடுகள் ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச வயது 18ஆக குறைப்பு. பார்வை குறைபாடு உடையவர்கள் பாதுகாப்பாக சாலையினை கடப்பதற்கு ஏதுவாக சென்னையில் 150 இடங்களில் போக்குவரத்து சாலை சந்திப்புகளில் குரல் ஒலிப்பான் சமிக்ஞைகள் நிறுவியது போன்ற பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்த அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தில், மாற்றுத் திறனாளிகளின் தேவைகள் அனைத்தையும் அறிந்து, அவர்கள் மனநிறைவோடு வாழ்ந்திட தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் ஏற்றமிகு திட்டங்களை மாற்றுத் திறனாளிகள் அனைவரும் சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என முதல்வர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், அரசு மாற்றுத் திறனாளிகளின் போராட்டங்களை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும். அவர்களது உரிமைகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சமுதாயத்தில் அவர்களும் சமவாய்ப்புகள் பெறுவதை உறுதி செய்திட வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி