ஆப்நகரம்

அதிர்ச்சியில் தேமுதிக- கடன் பாக்கிக்காக ஏலத்திற்கு வரும் விஜயகாந்த் வீடு மற்றும் கல்லூரி!

வங்கியில் பெற்ற கடன் பாக்கிக்காக விஜயகாந்த் வீடு மற்றும் கல்லூரி ஏலத்திற்கு வரவுள்ளது.

Samayam Tamil 21 Jun 2019, 12:33 pm
தமிழக அரசியல் வரலாற்றில் திராவிடக் கட்சிகளுக்கு அடுத்த இடத்தில் இருந்தது தேமுதிக. நடிகராக இருந்த விஜயகாந்த் அரசியல் பிரவேசம் செய்து, மக்கள் நலனுக்காக கட்சி ஒன்றை தொடங்கினார்.
Samayam Tamil Vijayakanth


விஜயகாந்தின் ரசிகர்கள் மட்டுமல்லாது, பலரும் தேமுதிக நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். முதல் இரண்டு தேர்தல்களில் விஸ்வரூப வளர்ச்சி பெற்ற தேமுதிக, அதன்பிறகு படிப்படியாக சரிவை நோக்கி செல்ல தொடங்கியது.

இதற்கு விஜயகாந்த் வைத்த கூட்டணி, அவரது உடல்நிலை உள்ளிட்டவை காரணமாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று, விஜயகாந்த் படிப்படியாக உடல் நலம் தேறி வருகிறார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேமுதிக படுதோல்வியை சந்தித்தது. இது அவரது கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை அளித்தது. இந்தச் சூழலில் மற்றொரு அதிர்ச்சி தரும் விஷயம் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் பெற்றுள்ளார். ஆனால் உரிய காலத்திற்குள் அதனை செலுத்தி முடிக்கவில்லை. தற்போது ரூ.5.52 கோடி கடன் பாக்கி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதனை வசூலிக்க வங்கி அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதன்படி, கடன் நிலுவை, வட்டி, இதர செலவுகளை வசூலிக்க விஜயகாந்த் வீடு மற்றும் கல்லூரியை ஏலம் விட திட்டமிட்டுள்ளது.

இதில் சாலி கிராமத்தில் உள்ள வீடு, மாமாண்டூரில் உள்ள கல்லூரி ஆகியவை அடங்கும். ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி 4,38,956 சதுர அடி கொண்டது. இது ஸ்ரீ ஆண்டாள் அழகர் எஜிகேஷனல் டிரஸ்ட் என்னும் பெயரில் உள்ளது.

சாலி கிராமத்தில் உள்ள கதவு எண்.71 மற்றும் 72 ஆகிய கட்டடங்கள் முறையே 4,651 சதுர அடி மற்றும் 10,271 சதுர அடி கொண்டது. அப்பகுதியில் உள்ள காலி மனை எண்:53 ஆனது 3,031 சதுர அடி கொண்டது. இவை விஜயகாந்த் பெயரில் இருக்கின்றன. இவை வரும் ஜூலை 26ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது.

ஏலம் தொடர்பான தகவல்கள் செய்தித் தாளில் வெளியாகியுள்ளது. இதைக் கண்ட தேமுதிகவினர் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கின்றனர். ஒருகாலத்தில் தமிழகத்தின் அடுத்த முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவரது நிலையைக் கண்டு பலரும் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி