ஆப்நகரம்

Local body election: விஜயகாந்துக்கு இருந்த தைரியம் ஏன் கமல் ஹாசனுக்கு இல்லை!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் மக்களவை தேர்தலை சந்தித்த பின்னர் ஊரக உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதற்கு ஏன் பயப்படுகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Dhanalakshmi.G | Samayam Tamil 13 Dec 2019, 4:46 pm
நடிகராக இருந்து அரசியல் கட்சித் தலைவராக உருவெடுத்து இருக்கும் கமல் ஹாசன் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளார்.
Samayam Tamil கமல் ஹாசன்
கமல் ஹாசன்


அவர் இவ்வாறு அறிவித்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. இதற்குக் காரணம், ''நாங்கள்தான் கிராம சபைக் கூட்டத்தைக் கூட்டி இருக்கிறோம். இதற்கு முன்பு எந்தக் கட்சியும் செய்யவில்லை'' என்று கூறி இருந்தார்.

அத்துடன் சில கிராமங்களுக்குச் சென்று கிராம சபைக் கூட்டம் நடத்தினார். தனது கட்சியினரையும் கிராம சபைக் கூட்டம் நடத்துமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி பல கிராமங்களில் கூட்டம் நடந்தது.

சென்னையில் தனது அலுவலகத்தில் இருந்து கிராம சபைக் கூட்டத்தை கமல் ஹாசன் துவக்கி வைத்து இருந்தார். கிராம மக்கள் தங்களது கருத்துக்களை, குறைகளை வெளிப்படுத்த கிராம சபைக் கூட்டம் முக்கியமானது என்று தெரிவித்து இருந்தார். ஆனால், தற்போது ஊராக உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்கவில்லை என்று அறிவித்துள்ளார்.

அதற்கான காரணமாக, ''உள்ளாட்சி தேர்தல் மக்களின் நலனுக்காக இருக்கப் போவதில்லை. ஊழல் கட்சிகள் தங்களுக்குள் போட்டுக் கொண்ட வியாபார பங்கீடு மட்டுமே அரங்கேறும். உள்ளாட்சி தேர்தல் முழுமையான மக்களின் தேர்வாக இருக்கப் போவதில்லை எனும் உண்மை அனைவரும் அறிந்ததே'' என்று தெரிவித்து இருந்தார்.

சென்னை மாநகராட்சியில் ரூ. 1000 கோடிக்கு ஊழல்: ஸ்டாலின் அறிக்கை!!

கிராமத்திற்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்தவர் ஏன் உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்கவில்லை. உள்ளாட்சி வரை தனது கட்சிக்கு பலம் இல்லை என்பதும் முக்கிய காரணமாகிறது. நகர அளவில் மட்டுமே தன்னை வளர்த்துக் கொண்டு இருக்கும் கமல் ஹாசன் இன்னும் கிராம அளவில் கட்சியை வளர்த்துக் கொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

பாக்ஸர் அங்கிள் உங்க வேலையைப் பாருங்க... அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த சித்தார்த்!!

கிராம அளவில் அவரது கட்சி விரிந்துள்ளதோ, இல்லையோ தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஊக்குவித்தது போன்று கிராமத்தில் இருக்கும் தனது கட்சித் தொண்டர்களை உள்ளாட்சி தேர்தலை சந்திக்குமாறு கூறலாம். அதன் மூலம் உள்ளாட்சிகளில் தனது கட்சியை வளர்க்கலாம்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா : அதிமுகவுக்கு எதிராக ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு !!

தேர்தலுக்கு நேரடியாக கமல் ஹாசன் வருவதற்கு முன்பே விஜய காந்த் தனது ஆதரவாளர்களை தேர்தலில் போட்டியிடுமாறு ஊக்குவித்தார். 2001இல் தனது ஆதரவாளர்களை ஊக்குவித்து, 2005இல் தான் கட்சியைத் தொடங்கினார்.

பின்னர் 2011இல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய காந்த் போட்டியிட்டார். 120 நகராட்சி கவுன்சிலர்களை பெற்று இருந்தார். மாநகராட்சி மேயர் முதல் வார்டு பஞ்சாயத்து வரை போட்டியிட்டார். காங்கிரஸ், பாமக, மதிமுக, போன்ற கட்சிகளையும் வெற்றி சதவீதத்தில் பின்னுக்குத் தள்ளி இருந்தார்.

கிராமத்தில் இருந்துதான் கட்சியை வளர்க்க வேண்டும். அதுதான் நிஜத்தில் அரசியல் கட்சியாக உருவெடுக்கும். நாட்டின் முதுகெலும்பே கிராமம்தான். நாட்டின் பலமும் கிராமம்தான். கிராமம் வரை தனது கட்சியை வளர்த்தால்தான், மக்களின் உண்மையான பிரச்சனைகளை அறிய முடியும். அங்கிருந்து பெறும் வெற்றிதான் உண்மையான வெற்றியாக கருதப்படும்.

''ஒவ்வொரு கிராமத்திற்கும் ரூ. 5 கோடி வரை ஒதுக்கப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 12,500கும் அதிகமான கிராமங்கள் உள்ளன. அந்தப் பணம் எவ்வாறு, எதற்கு பயன்படுத்தப்படுகிறது என்ற கேள்வியை எழுப்ப வேண்டும்'' என்று கமல் ஹாசன் பேசி இருந்தார்.

வெற்றி பெறுகிறாரா என்பது முக்கியமில்லை. களத்தில் இருக்கிறாரா என்பதுதான் முக்கியம். இவர் போன்றவர்கள் இந்த சூழலில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசியல் சாக்கு போக்குகளை சொல்லி ஒதுங்கிக் கொள்வது நியாயம் ஆகாது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
எழுத்தாளர் பற்றி
Dhanalakshmi.G

அடுத்த செய்தி