ஆப்நகரம்

ஓபிஎஸ்ஸின் அடுத்த திட்டம்: வைத்திலிங்கம் கொடுத்த நம்பிக்கை - சசிகலா தான் வேற யாரு?

sasikala ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவை சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 1 Oct 2022, 8:08 am
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்ததிலிருந்தே உட்கட்சி மோதல் பெரியளவில் வெடிக்க தொடங்கியது. ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் இரு அணிகள் உருவாகி பிளவுபட்டு நிற்கிறது அதிமுக. நிர்வாகிகளின் ஆதரவு எனக்கு தான் என்று ஒரு தரப்பும், தொண்டர்களின் ஆதரவு எனக்கு தான் என்று ஒரு தரப்பும் மோதி வருகிறது.
Samayam Tamil sasikala vaithilingam ops


ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் வழக்கு தொடர்ந்த நிலையில் உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அவரை கைவிட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார். நேற்று நடைபெற்ற விசாரணையின் போது அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு முயன்று வருவதாக ஓபிஎஸ் தரப்பு கூறியது.

எடப்பாடி பழனிசாமி தரப்போ பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தும் எண்ணம் தற்போது இல்லை, தேர்தல் நடத்த மாட்டோம் என உத்தரவாதம் அளித்தது. எனவே பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
அதிமுக அலுவலக வன்முறை வழக்கு: முன் ஜாமீன் நிபந்தனைகள் தளர்வு!
நீதிமன்றங்களில் நடைபெறும் ஒவ்வொரு விசாரணையின் போதும் ஒரு சமயம் ஓபிஎஸ் கை ஓங்குகிறது என்பது போலவும், ஒரு சமயம் எடப்பாடி பழனிசாமி கை ஓங்குவது போலவும் தோற்றம் எழுவதால் எந்த பக்கம் செல்வது என தெரியாமல் தொண்டர்கள் திணறி வருகின்றனர்.

ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுகவிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி கடந்த காலங்களில் உத்தரவுகளை பிறப்பித்தார். டிடிவி தினகரன் அமமுகவை தொடங்கி நடத்தி வருகிறார். சசிகலாவும், ஓபிஎஸ்ஸும் தாங்கள் இன்னும் அதிமுகவில் தொடர்வதாக வழக்கு தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமியின் இது போன்ற நடவடிக்கைகளால் தென் மண்டலத்தில் தொண்டர்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு சில பதவிகளை கொடுத்துவிட்டு தெற்கை பிடித்துவிடலாம் என எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டு வருகிறது.

இந்த சூழலில் உச்ச நீதிமன்றத்தில் நேற்றைய விசாரணைக்குப் பிறகு சென்னௌ கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், "பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பை வரவேற்கிறோம். கடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த தீர்மானம், ஓபிஎஸ் உட்பட ஆதரவாளர்களை நீக்கிய தீர்மானம் உட்பட அனைத்து தீர்மானங்களையும் உச்சநீதிமன்றம் அடுத்த விசாரணையின் போது ரத்து செய்யும் என நம்புகிறோம். மேலும், அரசியலில் நாங்கள் ஜீரோ என எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். ஆனால் இனி நாங்கள் தான் ஹீரோ" என கூறினார்.
பொதுச் செயலாளர் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி தரப்பு நிலைப்பாடு என்ன?
நீதிமன்றத்தின் அடுத்த விசாரணையை எதிர்பார்த்திருக்கும் ஓபிஎஸ் டீம், ஜெயலலிதாவோடு நெருங்கிப் பழகியவர்களை சந்தித்து வருகிறது. பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் சந்தித்துப் பேசிய நிலையில் அடுத்து யாரை சந்திக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது.

ஜெயலலிதாவோடு நெருங்கிப் பழகியவர் என்றால் சசிகலா அளவுக்கு யாராவது இருக்கிறார்களா? அவரைத் தான் ஓபிஎஸ் அடுத்து சந்தித்துப் பேச உள்ளார் என்று கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

அடுத்த செய்தி