ஆப்நகரம்

முதல்வர் ஸ்டாலின் டென்ஷன்; திருமாவளவனுக்கு நெருக்கடி!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர் ஒன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ரொம்பவே டென்ஷன் ஆக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 12 Aug 2022, 10:59 am
முதல்வர் மு.க.ஸ்டாலினை டென்ஷன் ஆக்கும் வகையில் விசிக சார்பில், ஒட்டப்பட்ட போஸ்டர் தமிழக அரசியலில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil it is reported that chief minister mk stalin is angry with thirumavalavan for pasting a poster criticizing dravida model
முதல்வர் ஸ்டாலின் டென்ஷன்; திருமாவளவனுக்கு நெருக்கடி!



திமுக எம்.பி மீது குற்றச்சாட்டு

விழுப்புரம் மாவட்டம், வழுதாவூர் பகுதியை சேர்ந்தவர் முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக எம்.பியுமான ஜெகத்ரட்சகன். இந்த பகுதியில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமாக சொந்தமாக பல நூறு ஏக்கர் நிலம் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் சுமார் 110 ஏக்கர் நிலங்கள் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ் எடையாளம் கிராமத்தை சேர்ந்த பட்டியல் இன மக்களுக்காக கொடுக்கப்பட்டு இருந்த பஞ்சமி நிலம் என்கிற குற்றச்சாட்டு கடந்த சில ஆண்டுகளாகவே எழுந்து வருகிறது. ஆனாலும் அவை குறித்த எந்த ஆவணங்களும் இதுவரை வெளியாகவில்லை.

பற்ற வைத்த பாஜக நிர்வாகிகள்

இதுதொடர்பாக ஏற்கனவே பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் தடா பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் ரகு உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனை சந்தித்து புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘பட்டியல் இன சமூக மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் ஜெகத்ரட்சகன் தன்னுடைய மனைவி பெயரில் கல்லூரி கட்டி வருகிறார். பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியல் இன சமூக மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என அதில் பாஜக நிர்வாகிகள் கூறியிருந்தனர். ஆனாலும் இந்த விவகாரம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

​களத்தில் இறங்கிய சிறுத்தைகள்

இந்த இடத்தில் ஜெகத்ரட்சகன் தன் மனைவி பெயரில் தற்போது கல்லூரி கட்டி வருவதாக கூறப்படுகிறது. பாஜகவினரே நேரடியாக கலெக்டர் வரை சென்று மோதிப் பார்த்தும் முடியாத நிலையில், இந்த பிரச்சனையை திமுக கூட்டணியின் பிரதான கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கையில் எடுத்து இருப்பது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி ஜூலை 27ம் தேதி மயிலம் சட்டசபை தொகுதிச் செயலாளர் செல்வசீமான் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அங்கு திடீரென வந்துள்ளனர். பின்னர் அவர்கள், ‘இந்த இடம் பஞ்சமி நிலம். இங்கு கல்லுாரி கட்டக்கூடாது’ என்று கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, விசிக கட்சிக் கொடி கட்டிய டிராக்டர் மூலம் கல்லுாரிக்கு எதிரிலுள்ள காலி இடத்தை உழுது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திராவிடல் மாடல் பற்றி போஸ்டர்

இதுகுறித்து தகவல் அறிந்து மயிலம் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வருவாய் துறையினர், ‘குறிப்பிட்ட இடம் பஞ்சமி நிலம் என்றால் முறையான ஆவணங்களை ஒப்படைத்து முறையிட வேண்டும்’ என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே இந்த பிரச்னை தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் படத்துடன் கூடிய கண்டன போஸ்டர் ஒன்று விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பளிச்சிட்டது. அந்த போஸ்டரில்,‘பஞ்சமி நிலத்தை அபகரிப்பது தான் திராவிட மாடலா?’ என்கிற வாசகம் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டரை திமுகவினர் அறிவாலயத்துக்கு அனுப்பி வைத்ததை அடுத்து விவகாரம் விஸ்வரூபம் ஆகி இருக்கிறது.

​அண்ணா அறிவாலயம் வார்னிங்

இதன் தொடர்ச்சியாக, திருமாவளவனை தொடர்பு கொண்ட அறிவாலயம் வட்டாரம் விசிக போஸ்டர் குறித்து, சற்று காட்டமாகவே பேசி இருக்கிறது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு சென்றதாகவும், விபரத்தை கேட்டறிந்து அப்செட் ஆகிவிட்டதாகவும் அவர்கள் திருமாவிடம் விளக்கி இருக்கின்றனர். இதனை சற்றும் எதிர்பாராத விசிக தலைவர் திருமாவளவன் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளை தொடர்புகொண்டு இதுகுறித்து விசாரித்தபோது தான் செல்வச்சீமான் சம்பவம் செய்த விபரமே தெரிய வந்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த திருமாவளவன், தனது கவனத்துக்கு கொண்டு வராதது குறித்து கட்சி நிர்வாகிகளை கடுமையாக திட்டி அனுப்பியுள்ளார்.

​திருமாவளவன் பரபரப்பு உத்தரவு

இதனைத் தொடர்ந்து, அவசரம் அவசரமாக செல்வ சீமானை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்த திருமாவளவன் கூட்டணிக் கட்சிகளின் மனதை பாதிக்கும் விதமாக கட்சியினர் யாரும் நடந்து கொள்ளக்கூடாது என்று கட்டளை பிறப்பித்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்து கொண்டே, திமுக எம்.பியின் சொத்து குறித்த விபரங்களை தோண்டித்துருவியதும், திராவிட மாடலை கிழித்து தொங்கப்பட்டு போஸ்டர் ஒட்டியதும் தமிழக அரசியலில் வித்தியாசமாகவே பார்க்கப்படுகிறது. அதே சமயம் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பஞ்சமி நிலங்களை மீட்கப்போவதாக சபதம் எடுத்துக்கொண்டு வலம் வந்த திருமாவளவன் திமுக ஆட்சியில் வாயை மூடிக்கொண்டு இருக்க கட்சியினருக்கு உத்தரவு போட்டிருப்பதை தம்பிகள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

அடுத்த செய்தி