ஆப்நகரம்

ஜெ.அன்பழகன் கடந்து வந்த பாதையும், கலைஞரின் நட்பும்!

திமுகவில் ஜெ.அன்பழகன் கடந்து வந்த பாதை மற்றும் அவர் ஆற்றிய பணிகள் குறித்து பார்க்கலாம்.

Samayam Tamil 10 Jun 2020, 9:57 am
மறைந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் தந்தை பழக்கடை ஜெயராமன் திமுகவில் மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்தவர். 1976ஆம் ஆண்டு மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின், முரசொலி மாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது ஜெயராமனும் உடன் இருந்தார்.
Samayam Tamil j anbazhagan


அப்போது சிறையில் இருந்தவர்களை குடும்பத்தினர் சந்தித்து பேச அனுமதி மறுக்கப்பட்டது. எழும்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கலைஞர் கருணாநிதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பள்ளிப் படிப்பை முடித்திருந்த ஜெ.அன்பழகன் கருணாநிதியோடு இணைந்து போராடினார். அதன்பின் ஒவ்வொரு வாரமும் சிறைக்குச் சென்று தனது தந்தையை பார்க்கச் செல்லும்போது கலைஞருடன் பேசி பழகினார்.

1985ஆம் ஆண்டு அன்பழகனின் தந்தை ஜெயராமன் உயிரிழந்தார். அப்போது அவர் வகித்த திமுக தியாகராய நகர் பகுதிச் செயலாளர் பதவியை அன்பழகன் ஏற்றார்.

திமுக எம்.எல்.ஏ அன்பழகன் காலமானார்!

1995ஆம் ஆண்டு அன்பழகனுக்கு லண்டனில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 2001ஆம் ஆண்டு திமுக சார்பில் தி.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்றத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக நேருக்கு நேராக விவாதங்களில் பங்கெடுத்தார்.

அந்த சமயம் அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு ஏற்பட்டதை கண்டித்து மறியல் அறிவித்ததால் கைது செய்யப்பட்டார். அன்பழகனை விடுவிக்க வலியுறுத்தி எழும்பூரில் கலைஞர் கருணாநிதி மறியலில் ஈடுபட்டார்.

2011, 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் திருவல்லிக்கேனி, சேப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 15 ஆண்டுகளாக திமுகவில் மாவட்டச் செயலாளராக பணியாற்றியவர் ஜெ.அன்பழகன்.

J Anbazhagan: சகோதரா! இனி எப்போது உன் பாசமுகம் காண்பேன்? - மு.க.ஸ்டாலின் உருக்கம்!

தனது கருத்தை எந்த இடத்திலும் துணிச்சலாக எடுத்துவைக்கக்கூடியவர் அன்பழகன், அது சட்டப் பேரவை என்றாலும் சரி, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என்றாலும் சரி. அன்பழகன் மனதில் பட்டதை யாருக்கு அஞ்சாமல் எடுத்துரைப்பதாலே அவருக்கு தொண்டர்கள் மத்தியில் தனி செல்வாக்கு இருக்கிறது.

ஆதி பகவன், யாருடா மகேஷ் உள்ளிட்ட திரைப்படங்களையும் அன்பழகன் தயாரித்துள்ளார். விஜய்யின் தலைவா படம் வெளியீட்டில் சிக்கல் வந்தபோது 300 திரையரங்குகளில் வெளியிடத் தயார் என விஜய்க்கு ஆதரவுக் கரம் நீட்டினார் அன்பழகன். 2015 பெரு வெள்ளம், 2016 ஆண்டு வர்தா புயல் என நிவாரணப் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட அன்பழகன், கொரோனா காலத்திலும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டார்.

62 வயதே ஆன அன்பழகன் தனது பிறந்தநாள் அன்றே மறைந்தது திமுகவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி