ஆப்நகரம்

வேதா இல்லத்தை கையகப்படுத்திய அரசு; எதிர்க்கும் தீபா

ஜெயலலிதா வசித்துவந்த வேதா இல்லத்தை, நினைவிடமாக மாற்றுவதற்கு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளித்துள்ளார். வேதா இல்லத்தை நினைவிடமாக்குவதை எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை கட்சி நிறுவனரும் ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமான தீபா தொடர்ந்து எதிர்த்து வருகிறார்.

Samayam Tamil 29 Jun 2019, 3:10 pm
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னையில் வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லத்தின் மதிப்பு ரூ.32 கோடி என தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. சென்னையில் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை, நினைவிடமாக மாற்றுவதற்கு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளித்துள்ளார்.
Samayam Tamil J_Jayalalithaa


24,000 சதுர அடி பரப்பளவு கொண்ட ஜெயலலிதாவின் வீட்டிற்கு ரூ.32 கோடியே 9 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு, கையகப்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தரப்பு கூறியுள்ளது. ரூ.16 கோடி வரி பாக்கி வைத்துள்ளதற்காக, வருமான வரித்துறை ஜெயலலிதாவின் வீட்டை முடக்கி வைத்துள்ளது.

வேதா இல்லத்தை அவரது நினைவிடம் ஆக்க முன்னதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை கட்சி நிறுவனரும் ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமான தீபா எதிர்த்தார். தீபா மற்றும் தீபக் ஆகியோர், போயஸ் தோட்ட இல்லத்திற்கு உரிமை கோரி வருகின்றனர். எனவே போயஸ் இல்லத்தை கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கையை எதிர்த்து, நீதிமன்றத்தை அணுக போவதாக தீபா தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி பேசிய தீபா தரப்பு வழக்கிறஞர் தொண்டன் சுப்பிரமணியன், இது ஜெயலலிதாவின் வாரிசுகளுக்கு சேர வேண்டிய சொத்து. இதை விட்டு கொடுக்க முடியாது. போயஸ் தோட்ட இல்லமானது சட்டப்படி தீபா மற்றும் தீபக் ஆகியோருக்கு தான் போய் சேர வேண்டும் என கூறினார்.

இதனிடையே ஜெயலலிதாவின் வாரிசு யார் என்று இன்னும் முடிவு செய்யப்படாததால், போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்துவதற்காக வழங்க வேண்டிய பணத்தை அரசு நீதிமன்றத்தில் செலுத்தும் என தெரிகிறது.

இதனிடையே போயஸ் தோட்ட வேதா இல்லத்தை கையகப்படுத்துவதற்காக, முறைப்படி பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியாகியுள்ளன. வேதா இல்லத்தை அரசு கையகப்படுத்துவதில் ஆட்சேபம் ஏதும் இருப்பின், 60 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிண்டி மண்டல வருவாய் அதிகாரி சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில், மேற்கண்ட அறிவிப்பு பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. போயஸ் இல்லத்தை கையகப்படுத்தும் பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேதா இல்லத்தை கையகப்படுத்துவது பற்றி தகவல் தெரிவித்த உயரதிகாரி ஒருவர், ஜெயலலிதா வசித்த வீட்டை நினைவில்லமாக மாற்ற பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கூட, அரசின் கொள்கை முடிவு என்பதால் இத்திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்.

இதனால் மக்கள் யாருமே பாதிக்கப்படும் வாய்ப்பு இல்லை, மேலும் பகுதிவாசிகள் யாரும் வேறு இடத்திற்கு செல்ல வேண்டிய சூழலும் ஏற்படாது என குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி