ஆப்நகரம்

மீண்டும் வெடித்த போயஸ் கார்டன் சர்ச்சை - பரபரப்பு ஆடியோ வெளியிட்ட ஜெ.தீபா!

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை மீட்டெடுக்க அதிமுக தொண்டர்கள், தமிழக மக்கள் அனைவரும் எங்களுக்கு உதவ வேண்டும் என்று ஜெ.தீபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Samayam Tamil 25 Jul 2020, 5:02 pm
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்திய நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் மகன் தீபன் ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் வேதா இல்லத்தின் நிலத்தைக் கையகப்படுத்தியதற்கான இழப்பீட்டு தொகையை சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று செலுத்தி உள்ளது. இதனால் போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கிக் கொண்டதாகவும் கூறியுள்ளது.
Samayam Tamil Deepa Jayakumar


இதற்கு ஜெ.தீபா எதிர்ப்பு தெரிவித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுக தொண்டர்களிடம் என் கோரிக்கையை முன்வைக்கிறேன். எனக்கு பொது நியாயம் வழங்க வேண்டும். ஜெயலலிதா வாழ்ந்த காலத்தில் அனைவரிடமும் சகோதரியாக தான் பழகினார். உங்கள் குடும்பத்தில் ஒருவராகத் தான் இருந்தார். அப்படி இருக்கும் போது அவரது வம்சா வழியில் வந்த நாங்களும் உங்கள் குடும்பத்தினர் இல்லையா? எங்களையும் உங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொள்ளுங்கள்.

67.9 கோடி செலுத்திய தமிழ்நாடு அரசு... அரசு வசமாகிறது வேதா இல்லம்?

எங்கள் பூர்வீக இல்லமான வேதா இல்லத்தை வைத்து நடக்கும் அக்கிரமத்திற்கு முடிவு கிடைக்க வேண்டும். இதனை அதிமுக தொண்டர்களாகிய நீங்கள் மட்டுமே செய்ய முடியும். எங்கள் குடும்பத்தின் பாதுகாவலர்களாக இருந்து எங்கள் குடும்ப சொத்துக்களை மீட்டெடுக்க உதவ வேண்டும். தமிழக மக்களிடம் நான் கேட்டுக் கொள்வது இதைத் தான். என்னையும் உங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்துக் கொள்ளுங்கள். ஜெயலலிதா சினிமா துறையில் மிகவும் கடினமாக உழைத்தவர்.

அவருடைய கஷ்டங்களை எங்களிடமும் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். அவருக்காக நாங்கள் கலங்கி இருக்கிறோம். அவருடைய அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப காலங்களிலும் பல்வேறு விஷயங்களை எங்களிடம் பகிர்ந்து கொள்வார். இவ்வளவு விஷயங்களை தாங்கி நின்று கொண்டிருக்கும் வேதா இல்லத்திற்கு மிகப்பெரிய வரலாறு உண்டு. எங்களுடைய வம்சா வழியினருக்கு அந்த இல்லத்தை விட்டுக் கொடுங்கள். எங்களுக்கு தேவை பணம் இல்லை. நியாயம் வேண்டும்.

தற்போது அரசியல் உள்நோக்கத்திற்காக வேதா நிலையத்தை அரசுடைமை ஆக்கும் விஷயங்கள் நடைபெற்று வருகின்றன. விரைவில் சட்டமன்ற தேர்தல் வருகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளனர். ஜெயலலிதாவின் ரத்த வாரிசுகள் நாங்கள் தான் என்று நீதிமன்றமே அங்கீகரித்து விட்ட சூழலில் எங்களுடைய எதிர்ப்பை சட்டப்படி பதிவு செய்துள்ளோம். வேதா இல்லத்தை எங்களுக்கு முறைப்படி வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளோம்.

தமிழக அரசு கொடுத்த ஷாக்: நில அளவை கட்டணம் இத்தனை மடங்கு உயர்வா?

அந்த இல்லத்தில் இருக்கும் பொருட்களை எடுப்பதற்காக உரிய கடிதம் அளித்துள்ளோம். ஆனால் அரசு எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இதில் முழுக்க முழுக்க குளறுபடிகளும், ஏமாற்று வேலைகளும் இருக்கின்றன. எனவே எங்களுக்கு நியாயம் கிடைக்க குரல் கொடுங்கள் என்று ஜெ.தீபா வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி