ஆப்நகரம்

எஸ்.வி.சேகர் வழக்கில், காவல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

பெண் பத்திரிக்கையாளர்களைத் தரக்குறைவாக பேசிய நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யாததை கண்டித்து, சென்னை காவல் ஆணையருக்கு பத்திரிக்கையாளர்கள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Samayam Tamil 16 May 2018, 12:59 pm
பெண் பத்திரிக்கையாளர்களைத் தரக்குறைவாக பேசிய நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யாததை கண்டித்து, சென்னை காவல் ஆணையருக்கு பத்திரிக்கையாளர்கள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Samayam Tamil எஸ்.வி.சேகர் வழக்கில், காவல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?
எஸ்.வி.சேகர் வழக்கில், காவல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?


பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர், கடந்த சில வாரங்களுக்கு முன், சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் பெண் பத்திரிக்கையாளர்கள் பற்றி அவதூறாக கருத்து பதிவிட்டார். அவரின் கருத்துக்கு, பத்திரிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே கடும் கண்டனம் எழுந்தது.

இதையடுத்து, அவரின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி எஸ்வி சேகர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, நீதிபதி எஸ்.ராமதிலகம் தள்ளுபடி செய்து, சாதாரண பொதுமக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ, அதே நடவடிக்கையை எஸ்.வி.சேகர் மீதும் எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, எஸ்.வி.சேகர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், கடந்த மே 12 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் எஸ்.வி.சேகர் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சுதந்திரமாக சுற்றித் திரியும் எஸ்.வி.சேகரைக் கைது செய்யாததைக் கண்டித்து, சென்னை காவல் ஆணையர் மற்றும் சென்னை சைபர் குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு பத்திரிக்கையாளர்கள், நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

அதில், நோட்டீஸ் பெற்ற 7 நாட்களுக்குள் எஸ்.வி.சேகரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லையெனில், அவர்கள் இருவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி