ஆப்நகரம்

''புதிதாகப் பதவியேற்கவுள்ள 'திமுக அரசு' இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசியம்'' - கீ. வீரமணி

பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக ஆளுநர் ஏன் நியமிக்க வேண்டும் என கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

Samayam Tamil 9 Apr 2021, 7:22 pm
பல்கலைக்கழக துணை வேந்தர்களை ஆளுநர் நியமிப்பதென்பது மாநில உரிமைகளை அதிமுக அரசு டெல்லிக்கு அடகு வைத்துள்ள செயலாக கீ. வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil file pic


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, '' எடப்பாடி கே.பழனிசாமி முதல்வரானதிலிருந்து கடந்த 4 ஆண்டுகளாக பறிபோன மாநில அரசின் உரிமைகள் பலப்பல. கல்வித் துறையிலும், விவசாயத் துறையிலும், மின்சாரத் துறையிலும், நிதித்துறையிலும் மிக அதிகம்

ஊழல் செய்து சிக்கிக்கொண்ட டைரிகள் மற்றும் சிலவற்றை ஒரு பிடியாக மத்தியில் உள்ள பாஜக அரசு, மோடி அரசு, பாஜகவை தமிழ்நாட்டில் காலூன்ற வைக்க, அதிமுக அரசினைக் குறி வைத்து, குனிய வைத்து, அதன் முதுகில்மீது ஏறி நின்று, தனது உயரத்தை அதிகரித்துவிட்டதாக ஒரு போலித் தோற்றத்தை, பொய் முகத்தை, விசித்திரமானதோர் மாயையையும் உருவாக்கிட தொடர்ந்து முயற்சி செய்து வெற்றியும் பெற்றுள்ளது!

அடிமை அரசாக, டெல்லிக்கு நமது மாநில உரிமைகளை அடகு வைத்த அரசாக இந்த அரசு நடந்துகொண்டது வேதனையும், வெட்கமும் அடைய வேண்டிய ஒன்றாகும்! அரசியலமைப்புச் சட்டத்தில் அளித்துள்ள மாநில உரிமைகளைக்கூட வலியுறுத்தி, நிலைநாட்ட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு முன்வரவில்லை

தியாகராய நகர் தொகுதி திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதிக்கு கொரோனா..!

இந்த லட்சணத்தில் முதல்வர் பதவிப் போட்டி என்ற 'கேரட்டை'க் காட்டி, அக்கட்சியை இரண்டாகப் பிரித்து, பிறகு மூன்றாகவும் ஆகும் நிலைமைக்குத் தள்ளி, அந்த மூக்கணாங்கயிற்றைத் தனது வசப்படுத்திக் கொண்டு, ஆட்சியில் இல்லாமலேயே கடந்த 4 ஆண்டுகளாக, மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டை நீட் தேர்வு தொடங்கி, விவசாய சட்டங்களை இயற்றுவதிலிருந்து, மத்தியக் கல்விக் கொள்கை, இட ஒதுக்கீடு என்ற சமூகநீதிச் சட்டங்களை உடைத்துப் பின்பற்றத் தவறுதல்வரை எல்லாம் பட்டாங்கமாய் நடைபெறுகின்றன!

புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வந்தவுடன், அவர் ஒரு தனி ராஜ்ய பாரமே நடத்திடும் வண்ணம் அலுவலகங்களுக்குச் சென்று ஆராய்வு என்று ஒரு இணை அரசாங்கம் நடத்தினர். ஆளுங்கட்சி தனது எதிர்ப்பைக் காட்டாதது மட்டுமல்லாமல், இதை எதிர்த்து மாநில உரிமைக்குப் போராடிய எதிர்க்கட்சி திமுகவினரைப் பயன்படுத்திக் கொள்ளவும் மனமின்றி, ஆளுநருக்கு அதிகாரமுண்டு என்று கூறி, தனக்குத்தானே குழியும் பறித்த வெட்கக்கேடும் நடந்தது!

அடுத்தகட்டம் ஆளுநர், அரசியலமைப்புச் சட்டப்படி உள்ளதை மறந்து, தானே ஆளுமையை நடத்தத் தொடங்கினார்! துணைவேந்தர்கள் நியமனம் கோட்டையிலிருந்து ஏனோ ராஜ்பவனுக்கு மாற்றப்பட்டது.

1. பல்கலைக்கழக வேந்தர் ஆளுநர் என்று ஒரு ex-officio பதவிதான். ஆளுநர் பெயரில் அரசு ஆணைகள் என்று வந்தாலும், உண்மையில் அமைச்சரவையின் ஆளுமைதானேயொழிய அவருடையதல்ல.

2. சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்துவது, ஆளுநரால் தயாரிக்கப்பட்ட உரை அல்ல, அமைச்சரவையால். அவர் தனது சொந்த விருப்பத்தை, அதிகாரத்தை அதில் புகுத்த முடியாது. அமைச்சரவை தயாரித்த உரையை அவர் படிப்பதற்கு மட்டுமே உரிமையாகும்! இது காலங்காலமாக பின்பற்றப்படும் நடைமுறை.

அதுபோலவே, ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை, துணைவேந்தர்கள் நியமனம் என்பது தமிழக அரசின் அதிகாரத்திற்குட்பட்டதாகவே இருந்தது; ஆளுநர் ஒப்புதல் தருபவராக மட்டுமே இருந்த நடைமுறை, பிறகு, தலைகீழாக அதிமுக முதல்வராக பழனிசாமியின் காலத்தில் மாறியது.
இவர்கள் மறுப்பேதும் கூறாது, மண்டியிட்டது மாநில உரிமைப் பறிப்பு அல்லவா?

ஊழலைக் களைய இப்படி ஒரு புது ஏற்பாடு என்று 'சப்பை' கட்டும் வாதம்கூட சொத்தையானது என்பது, ஆளுநரால் நியமிக்கப்பட்ட சில துணைவேந்தர்கள் லஞ்சம், ஒழுக்கத் தவறுகள் மூலம் உயர் நீதிமன்றத்தில் நிற்கும் அவலம் ஏற்படவில்லையா?

துணைவேந்தர்கள் நியமனம் பழையபடி மாநில அரசின் உரிமையாக இருக்க வேண்டுமே தவிர, கொல்லைப்புற வழியாக, ஆளுநர் மூலம், மத்திய அரசின் நியமனமாக மாற்றப்பட்டுள்ள இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது, புதிதாகப் பதவியேற்கவுள்ள மாநில அரசின் முதற்பணியாக அமைய வேண்டியது அவசர அவசியமாகும்'' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி