ஆப்நகரம்

அதிமுக மத்திய அரசுக்கு எடுபிடி: மநீம தலைவர் கமல்

அதிமுக மத்திய அரசின் எடுபிடி போல இருக்கிறது என்றும் போலியான உண்ணாவிரதம் இருந்து இயலாமையை மறைக்கிறது என்றும் மநீம தலைவர் கமல் குற்றம்சாட்டியுள்ளார்.

Samayam Tamil 4 Apr 2018, 12:39 pm
அதிமுக மத்திய அரசின் எடுபிடி போல இருக்கிறது என்றும் போலியான உண்ணாவிரதம் இருந்து இயலாமையை மறைக்கிறது என்றும் மநீம தலைவர் கமல் குற்றம்சாட்டியுள்ளார்.
Samayam Tamil large_06121884-0d96-4905-95fc-80fe7910607c-47138


நடிகர் கமல்ஹாசன் மதுரையில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி கட்சி அறிவிப்புக் கூட்டத்தை நடத்தினார். அப்போது தனது கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என்ற பெயரை அறிவித்தார்.

தொடர்ந்து அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், திருச்சியில் இன்று பெரிய அளவில் பொதுக்கூட்டத்தை நடத்துகிறார். பொன்மலையில் ஜி கார்னர் பகுதியில் உள்ள சுப்பிரமணிய புரத்தில் இந்தக் கூட்டம் நடக்கிறது.

இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வைகை எக்ஸ்பிரஸில் கட்சியின் உயர்நிலைக்குழு உறுப்பினர்களுடன் திருச்சிக்கு வந்துள்ளார். இன்று கமல் பேசும்போது கட்சியின் கொள்கை, காவிரி விவகாரத்தில் முக்கிய தீர்மானம் ஆகியவற்றை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் திருச்சியில் காலை செய்தியாளர்களைச் சந்தித்த கமல், “மக்கள் நீதி மய்யம் பிப்ரவரி 22ஆம் தேதியே திருச்சி பொதுக்கூட்டம் பற்றி அறிவித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரத்துக்குள் அமைக்கும் என்று நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால், சாக்குபோக்கு காட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தவிர்க்கின்றனர். இப்போதும் அதே போன்ற நாடகம் அரங்கேறுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை. தமிழக அரசின் போலியான உண்ணாவிரதம் இருந்து தன் இயலாமையை மறைக்க முயல்கிறது. அதிமுக மத்திய அரசின் எடுபிடி போல இருக்கிறது.” என்று கமல்ஹாசன் சாடினார்.

மேலும், இன்றையக் கூட்டத்தில் காவிரி விவகாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற அவர், முக்கியத் துறைகளில் மநீம கொள்கைகள் அறிவிக்கப்படும் என்றும் 5 மாதங்களில் முழு கொள்கையையும் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி