ஆப்நகரம்

''உயிர் தப்பியவர்களில் நானும் ஒருவன்'' போலீஸ் விசாரணைக்கு பின்னர் கமல் பேட்டி..!

எங்கள் துறையில் இனி இது போன்ற விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்கு நாங்கள் எடுக்கும் முயற்சிகளில் முதற்கட்ட முயற்சியாகவே இந்த விசாரணையை கருதுகிறேன் என கமல் தெரிவிப்பு.

Samayam Tamil 3 Mar 2020, 11:09 pm
சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் கடந்த மாதம் 19 ஆம் தேதி 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக பிரம்மாண்டமாக செட் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது மின் விளக்குகளை சுமந்து இயங்கிக்கொண்டிருந்த கிரேன் முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
Samayam Tamil போலீஸ் விசாரணைக்கு பின்னர் கமல் பேட்டி


அந்த விபத்தில் துணை இயக்குனர் கிருஷ்ணா, தொழில்நுட்ப பணியாளர்களாக சந்திரன், மது ஆகிய மூன்று பேர் பலியாகி பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த நசரத்பேட்டை போலீசார் விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவான கிரேன் ஆபரேட்டர் ராஜன் என்பவரை கைது செய்தனர்.

இதையடுத்து, இந்தியன் 2 படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனத்துக்கும், இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல் மூவருக்கும் நேரில் ஆஜராகும்படி மத்திய குற்றப்பிரிவு சம்மன் அனுப்பியிருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரான கமலிடம் போலீசார் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

விசாரணை முடிந்து வெளியே வந்த கமல் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, '' கமிஷனர் அலுவலகத்தில் விபத்தில் நடந்தவற்றை குறித்து விசாரிப்பதற்காக அழைத்திருந்தனர். இந்த விபத்தில் அடிபடாமல் தப்பிய நபர்களில் நானும் ஒருவன். இறந்த மூன்று சகோதரர்களுக்கு நான் செய்யும் கடமையாக எண்ணி விபத்தின்போது நடந்தவற்றை காவல்துறைக்கு எனக்கு தெரிந்த அளவில் எடுத்துச் சொல்லியிருக்கிறேன்.

புதிய கட்சி: மார்ச் 5 இல் ரஜினி முக்கிய முடிவு?

எங்கள் துறையில் இனி இது போன்ற விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்கு நாங்கள் எடுக்கும் முயற்சிகளில் முதற்கட்ட முயற்சியாகவே இந்த கலந்துரையாடலை நான் கருதுகிறேன்" என இவ்வாறு கூறினார்.

கண்டனம்: இதனிடையே, " கமல் ஹாசனிடம் மணிக்கணக்கில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் நிர்வாகி ஆர்.தங்கவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில், " எங்களின் வளர்ச்சியை பிடிக்காத தமிழக அரசு, காவல் துறை மூலமாக, காட்சி என்ற பெயரில் இன்று மூன்று மணிநேரம் விசாரணை நடத்தடப்பட்டுள்ளது. இந்தச் செயலை தமிழக அரசு இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி