ஆப்நகரம்

விரைவில் உதிர்ந்து போவீர்கள்: கமல்ஹாசன் விளாசல்!

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்

Samayam Tamil 30 Oct 2020, 7:20 pm
நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைத்துத் தரக்கோரி அம்மாவட்ட மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து, நாமக்கல் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் ரூ.270 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.
Samayam Tamil கமல்ஹாசன்
கமல்ஹாசன்


மருத்துவ கல்லூரியில் இரண்டாம் தளம் கட்டும் பணி நடைபெற்ற வந்த நிலையில் நேற்று இரவிலும் பணிகள் நடைபெற்று வந்ததாக தெரிகிறது. இதில் நுழைவாயில் முகப்பு கான்கீரிட் தளம் அமைக்க பணிகள் நடைபெற்ற போது, அதிலிருந்த தூண் மற்றும் முன்பகுதி முழுவதுமாக இடிந்து சேதமடைந்துள்ளது.

இந்த விபத்தில் சிக்கி வட மாநில தொழிலாளர்கள் ஐந்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து நாமக்கல் மற்றும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டுமான பணியில் தரமற்ற கம்பிகள், சிமென்ட் பயன்படுத்தப் படுகின்றனவா என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறந்த ஆட்சி நடக்கும் மாநிலங்களில் தமிழகம் டாப் இடம்!

அரசு மருத்துவக் கல்லூரிக்கான புதிய கட்டடம் சரிந்து விழுந்தது அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதற்கிடையே, விபத்து தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், நாமக்கல் மருத்துவக் கல்லூரி, கட்டும் போதே இடிந்து விழுந்திருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்குள் கட்டி முடித்து அரசியல் ஆதாயம் தேடும் அவசரக் கோலமே இந்த அலங்கோலத்திற்குக் காரணம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன், “மக்கள் வரிப்பணம் 336 கோடி ரூபாய் உருமாறும் கோலம் இது. உயிர் காக்கும் மருத்துவமனை உருவாகும் போதே உடைந்து போயிருக்கிறது. நினைவிருக்கட்டும்...நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள். நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்யாதிருங்களய்யா. மக்கள் நீதி மலர… தக்க தருணம் இதுவே” என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி