ஆப்நகரம்

ரஜினிகிட்ட ஈகோ பார்க்க மாட்டேன்: கண்டிஷன் போட்ட கமல்ஹாசன்!

ரஜினியின் கொள்கை என்ன என்பதை அறிந்துகொண்டு அவருடன் இணைந்து செயல்பட தயார் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 15 Dec 2020, 6:15 pm
தமிழகம் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறது. அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் இப்போதே தொடங்கி விட்டன. கூட்டணி பேச்சுவார்த்தைகள், கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவது, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அரசியல் களத்தில் அரங்கேறி வருகிறது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


எதிர்வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் குறிப்பாக திரை நட்சத்திரங்கள் ரஜினி, கமல் ஆகியோரது வருகை கவனத்தை பெற்றுள்ளது. கமல்ஹாசனை பொறுத்தவரை அவரது மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் களம் கண்டு 3.77 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. ஆனால், ரஜினியோ இன்னும் கட்சி தொடங்கவில்லை. இருப்பினும், ஜனவரியில் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பு டிசம்பர் 31ஆம் தேதி வெளியிடப்படும் என்று ரஜினி தெரிவித்துள்ளதால் பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழகத்தின் மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் நானும், ரஜினியும் சேர்ந்து பயணிப்போம் என்று கடந்த ஆண்டே கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். தேவைப்பட்டால், இணைய வேண்டிய சூழல் ஏற்பட்டால் கமலுடன் இணைவேன் என்று ரஜினியும் தனது நிலைப்பாட்டை தெரிவித்தார்.

கட்சி பெயர், ஆட்டோ சின்னம்: மறுக்காமல் மழுப்பிய ரஜினி!

இதனிடையே, தலைநிமிரட்டும் தமிழகம் என்ற பெயரில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், முதல்கட்டமாக மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “ரஜினியின் கொள்கை என்ன என்பதை அறிந்துகொண்டு, மக்களுக்காக ஈகோவை தவிர்த்து ரஜினியுடன் இணைந்து செயல்பட தயார்” என்று தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்


முன்னதாக, “நானும் ரஜினியும் கூட்டணி அமைக்கத்தான் போகிறோம். அதற்குச் சரியான நேரம் வரவேண்டும். இதை நான் ஒரு வருடத்திற்கு முன்பே கூறினேன். வருகிற 31ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்த்து அதன்பின் பதில் சொல்கிறேன். கூடிய விரைவில் 3ஆம் அணி அறிவிப்பு வெளியாகும்” என்று கமல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி