ஆப்நகரம்

'மரணத்தைச் சுமந்துபோன யானையின் ஓலம் அலைக்கழிகிறது' - கமல்

நீலகிரி அருகே காட்டு யானை உயிரிழந்த சம்பவத்துக்கு கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 23 Jan 2021, 6:30 pm
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மசினகுடியில் கடந்த சில மாதங்களாக, பலத்த காயத்துடன் சுற்றிவந்த காட்டு யானை, கடந்த மாதம் 28ஆம் தேதி கும்கி யானைகளின் உதவியுடன் பிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அந்த யானை சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தது.
Samayam Tamil elephant death


இதற்கிடையில், மசினகுடியில் உயிரிழந்த யானை மீது தீப்பற்றிய காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், யானை அங்குள்ள ரிசாட் பகுதிக்குள் சுற்றி வந்த போது சிலர், டயரில் தீ வைத்து, யானை மீது வீசுகின்றனர்.

அது எதிர்பாராதவிதமாக, யானையின் இடது காது பகுதியில் தங்கி, யானை காது மடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அப்போது யானை ஆக்ரோஷமாக கத்தியதால் அங்கிருந்தவர்களால் அருகில் செல்ல முடியவில்லை. சிறிது நேரத்தில் வலி தாங்காமல் அலறிய யானை காட்டுக்குள் சென்று விட்டது.

அதுதொடர்பாக வனத்துறையினர் விசாரித்து வந்த நிலையில், யானை மீது எரியும் டயரை வீசியதாக பிரசாத், ரேமண்ட் டீன், ரிக்கி ராயன் ஆகிய மூவரை கைது செய்தனர். மேலும், யானைக்கு தீ வைத்த மசினகுடி சொகுசு விடுதிக்கு சீல் வைக்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

நெற்பயிர் சேதம்: கடனை கட்ட முடியாமல் ரயில் முன் பாய்ந்து விவசாயி தற்கொலை..!

இந்த கொடூர சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் யாவரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் வேதனை தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் ட்வீட்டில், '' காடுகள் கொன்று நாடுகள் ஆக்கினோம். காட்டுயிர்களின் கதியை மறந்தோம். உயிரோடு எரிக்கும் வழக்கம் எப்படி வந்தது? பின்வாங்கிப் போகும் யானையைக் கொளுத்துவது நாட்டுமிராண்டித்தனமா? மரணத்தைச் சுமந்துபோன யானையின் ஓலம் அலைக்கழிகிறது. காலம் தலைகுனிகிறது'' என இவ்வாறு கூறியுள்ளார்.

அடுத்த செய்தி