ஆப்நகரம்

மக்களே நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம்: கமல் ட்வீட்!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்

Samayam Tamil 15 May 2020, 2:35 pm
கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகளை வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சகம் மதுக்கடைகளை திறந்து கொள்ளலாம் என தெரிவித்தது. இதையடுத்து, தமிழகத்தில் கட்டுப்ப்படுத்தப்பட்ட பகுதிகள், சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் அரசின் டாஸ்மாக் கடைகள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன. அதன் மூலம், சுமார் ரூ.300 கோடி வரை தமிழக அரசு வருவாய் ஈட்டியது.
Samayam Tamil கமல்ஹாசன்
கமல்ஹாசன்


இதனிடையே, இதனிடையே, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுக்கடைகளை திறந்தது ஆபத்தானது எனவும், நீதிமன்றத்தின் விதிமுறைகள் மதுக்கடைகளில் பின்பற்றப்படவில்லை எனவும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், டாஸ்மாக் கடைகளை மூட கடந்த 8ஆம் தேதி உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்திருந்தன. இந்த வழக்குகள் மீதான விசாரணை மே 12ஆம் தேதி நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெறவிருந்த நிலையில், திடீரென வழக்குகள் விசாரணை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

திருச்சியில் உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு...

தொடர்ந்து, இந்த வழக்கின் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற அறிவிப்பின்படி இன்று நடைபெற்றது. அப்போது, ஆன்லைனில் மது விற்பனை தற்போதைக்கு சாத்தியமில்லை. ஆன்லைனில் மது விற்றால் அது மது கடத்தலை அதிகரித்துவிடும். மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளை திறப்பது அரசின் கொள்கை சார்ந்த முடிவு என்பதால் நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என தமிழக அரசின் வழக்கறிஞர் வாதிட்டார்.

இதையடுத்து, மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கும் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் டாஸ்மாக் கடை திறப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியுள்ளது. எனினும் எழுத்துப்பூர்வமான உத்தரவு இதுவரை வெளியிடப்படவில்லை.

முன்னதாக, டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிரான பல்வேறு பொதுநல மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த பொதுநல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, பி.என்.பிரகாஷ் ஆகியோர் அடங்கிய முழு அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, மக்களின் உயிரை விட டாஸ்மாக் மூலம் வருவாய் திரட்டுவது முக்கியமானதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பொது அமைதி சீர்குலைந்தால் நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்காது எனவும் தெரிவித்து வழக்கு விசாரணையை மே 15ஆம் தேதிக்கு (இன்று) ஒத்தி வைத்தனர்.

கொரோனா இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும்: ராதாகிருஷ்ணன் நம்பிக்கை!

அதன்படி, டாஸ்மாக் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2ஆவது நாளாக இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்யாத தமிழக அரசு, விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய அவகாசம் தேவை என கோரியது.

இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச நீதிமன்றத்தில் இடைகாலத்தடை வாங்கி விட்டது தமிழக அரசு. மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது” என பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி