ஆப்நகரம்

குடியுரிமை மசோதாவை கேட்டு கொதித்து எழுந்த கமல்!

குடியுரிமை மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு. நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது எதிர்ப்பை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 10 Dec 2019, 11:16 pm
மக்களவையில், சுமார் ஒன்பது மணி நேரம் விவாதங்களுக்கு பிறகு, குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது, அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் தொகுதி எம்பியுமான ஓவைசி, குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவின் நகலை கிழித்தெறிந்தார்.
Samayam Tamil 61925


இருப்பினும், மக்களவையில் பாஜக அசுர பலத்துடன் இருப்பதால், வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

மாநிலங்களவையில் நாளை தக்கல்: நிறைவேறுமா குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா?

இந்த நிலையில், குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வடகிழக்கு மாநிலங்களில் முழு அடைப்புக்கு மாணவர் அமைப்பினர் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி, அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது.



இந்த போராட்டத்தின்போது டயர் உள்ளிட்டவற்றை சாலைகளின் நடுவே வைத்து கொளுத்தி, அவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் இன்று, அஸ்ஸாம் மாநிலத்தின் முக்கிய நகரங்கள் போர்க்களமாக காட்சியளித்தன.



மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நாளை மதியம் 2 மணிக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.



இந்நிலையில், இப்போது இந்த மசோதாவுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில், “குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிலிருந்து இனப் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர்களும், ஒடுக்கப்படும் இஸ்லாமியர்களும் விடுப்பட்டது ஏன்? இந்த மசோதா வாக்கு வங்கிக்காக கொண்டு வரப்படவில்லை என்றால் இலங்கை தமிழர்களையும், இஸ்லாமியர்களையும் புறக்கணிப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒழுங்கா இந்தச் சட்டத்தை வாபஸ் வாங்குங்க... வீதிகளில் இறங்கிய மாணவர்கள்...போர்க்களமான அஸ்ஸாம்!!

கமலின் இந்த ட்வீடுக்கு இடையில், வரும் நாட்களில் இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டங்கள் வலுக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், இப்போது கொண்டு வந்துள்ள சட்ட திருத்த மசோதாவின் மூலமாக உலக அரங்கில் இந்தியாவை இந்து நாடாக முன் நிறுத்த பாஜக முயல்வதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

அடுத்த செய்தி