ஆப்நகரம்

பெண் பத்திரிக்கையாளரிடம் தவறாக நடந்த கவர்னருக்கு கனிமொழி கண்டனம்!

ராஜ்பவனில் நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், பெண் பத்திரிக்கையாளரிடம் ஆளுநர் தவறாக நடந்து கொண்டதற்கு திமுக கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 17 Apr 2018, 10:07 pm
ராஜ்பவனில் நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், பெண் பத்திரிக்கையாளரிடம் ஆளுநர் தவறாக நடந்து கொண்டதற்கு திமுக கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil பெண் பத்திரிக்கையாளரிடம் தவறாக நடந்த கவர்னர்
பெண் பத்திரிக்கையாளரிடம் தவறாக நடந்த கவர்னர்


கடந்த சில தினங்களுக்கு முன், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி என்பவர், மாணவிகளை பாலியல் செயலுக்குத் தூண்டுவது போன்ற செல்போன் உரையாடல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

அந்த ஆடியோவில் பேராசிரியை தனக்கு ஆளுநரை நன்றாக தெரியும் என்று கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, இது குறித்து விளக்கமளிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று மாலை 6 மணியளவில், கிண்டியில் உள்ள ராஜ்பவனில் செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார்.

அப்போது செய்தியாளர்கள், பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஆளுநர், “நிர்மலா தேவியை நான் பார்த்ததேயில்லை. அவர் யார் என்பதே எனக்குத் தெரியாது,” என்று கூறினார்.

செய்தியாளர் சந்திப்பு முடிந்த பின், கேள்வி எழுப்பிய பெண் பத்திரிக்கையாளரை பாராட்டும் விதமாக அவரது கன்னத்தில் ஆளுநர் செல்லமாக தட்டினார். இதைத்தொடர்ந்து, அந்தப் பெண் பத்திரிக்கையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அவர் பாராட்டுவதற்காக ஒரு தாத்தாவைப் போல் பாசமாக தட்டியிருக்கலாம். ஆனால், ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரைத் தொடுவது என்பது மிகவும் தவறானது.” என்று கருத்து பதிவிட்டார்.

இந்நிலையில், இந்த சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாக திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நோக்கம் தவறானதாக இல்லாது இருப்பினும், பொது வாழ்வில் இருப்போர், கண்ணியத்தையும், நாகரீகத்தையும் கடைபிடிப்பது அவசியம்.பெண் பத்திரிக்கையாளரின்அனுமதி இல்லாமல், அவரை தொடுவது, கண்ணியமான செயலல்ல.சக மனிதருக்கு உரிய மரியாதையை அளிப்பது, பொது வாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை,” என்ற தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

அடுத்த செய்தி