ஆப்நகரம்

கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்: காங்கிரஸ் வசம் 22 துறைகள்; ஜேடிஎஸ்க்கு நிதி!!

கர்நாடகா அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதில் காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் இடையே சமரசம் ஏற்பட்டு, காங்கிரஸ் வசம் 22 துறைகளும், ஜேடிஎஸ் வசம் நிதித்துறையும் செல்கிறது.

Samayam Tamil 1 Jun 2018, 6:03 pm
கர்நாடகா அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதில் காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் இடையே சமரசம் ஏற்பட்டு, காங்கிரஸ் வசம் 22 துறைகளும், ஜேடிஎஸ் வசம் நிதித்துறையும் செல்கிறது.
Samayam Tamil கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்
கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்


கர்நாடகா மாநிலத்தில் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே அமைச்சரவை இலாக்காக்கள் பிரித்துக் கொள்வதில் சமரசம் ஏற்பட்டுள்ளது. இருகட்சிகள் இடையே நீடித்து வந்த பேச்சுவார்த்தையில் ஜேடிஎஸ் வசம் நிதித்துறை செல்கிறது. இதுதவிர உள்துறை, நீர்ப் பாசனம், பெங்களூரு நகர வளர்ச்சி, கனரக தொழிற்சாலை மற்றும் சர்க்கரை தொழிற்சாலை, சுகாதாரம், கல்வி, வருமானம், நகர்ப்புற வளர்ச்சித்துறை, கிராமப்புற வளர்ச்சித்துறை, விவசாயம், ஹவுசிங், மருத்துவக் கல்வி, சமூக நலத்துறை, தொழிலாளர் நலம், வனத்துறை மற்றும் சுரங்கம், உணவு மற்றும் சிவில் சப்ளைஸ், வக்ப் போர்டு மற்றும் சிறுபான்மை விவகாரம், சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரம், இளைஞர், விளையாட்டு மற்றும் கன்னட பண்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகள், ஐடி/பிடி, துறைமுகம் மற்றும் உள்நாட்டு போக்குவரத்து வளர்ச்சி ஆகிய துறைகள் காங்கிரஸ் வசம் செல்கிறது.
கூட்டணி ஆட்சியில் 5 ஆண்டுகளும் முதல்வராக ஹெச்டி குமாரசாமி நீடிப்பார். துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியின் ஜி. பரமேஸ்வரா நீடிப்பார். இதற்கான அறிவிப்பை இன்று பெங்களூருவில் காங்கிரஸ் கட்சித் தலைவர் கேசி வேணுகோபால் வெளியிட்டார். துறை ஒதுக்கீடுகள் வெளியிடப்பட்டாலும், துறை அமைச்சர்களின் பெயர் இன்று வெளியாகவில்லை.

இதுகுறித்து வேணுகோபால் கூறுகையில், ''நாட்டின் தற்போதைய நிலைமைக்கு இந்தக் கூட்டணி தேவை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குமாரசாமியிடம் ராகுல் காந்தி பேசி நிதித்துறை ஒதுக்க ஒப்புக் கொண்டார். வரும் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் இதே கூட்டணி நீடிக்கும்'' என்றார்.

கர்நாடக மாநிலத் தேர்தலில் 78 இடங்கள் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, 38 இடங்களில் வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி கடந்த மே 23-ம் தேதி முதல்வராக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான பரமேஸ்வராவுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி