ஆப்நகரம்

மதுவிலக்கு பற்றி பேசுவது தேசத் துரோகமாம்: கருணாநிதி கண்டனம்

தங்களுக்கு எதிராகக் கருத்து தெரிவிப்போர் மீதெல்லாம் அதிமுக அரசு தேச துரோக வழக்குகளை பதிவு செய்து வருகிறது என திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

TNN 3 Apr 2016, 2:15 pm
சென்னை: தங்களுக்கு எதிராகக் கருத்து தெரிவிப்போர் மீதெல்லாம் அதிமுக அரசு தேச துரோக வழக்குகளை பதிவு செய்து வருகிறது என திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil liquor ban speech is sedation karunanidhi condemns admk govt
மதுவிலக்கு பற்றி பேசுவது தேசத் துரோகமாம்: கருணாநிதி கண்டனம்


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: மதுவிலக்குக்காகப் போராடி வரும் "மக்கள் அதிகாரம்" என்ற அமைப்பு, திருச்சியில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதியன்று நடத்திய மது ஒழிப்பு மாநாட்டில் பேசியவர்களில், ஆறு பேர் மீது மாநாடு நடந்து முடிந்து ஒரு மாதத்துக்குப் பிறகு மார்ச் மாதம் 26-ம் தேதியன்று தமிழக அதிமுக அரசு தேச துரோக வழக்குப் பதிவு செய்துள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பிரசாரம் செய்த மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் கோவனை திருச்சியில் காவல் துறையினர் கைது செய்து, அவர் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்தார்கள்.

தற்போது அடுத்த கட்டமாக மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்துள்ளார்கள். ஜனநாயக ரீதியான கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை ஜெயலலலிதா ஆட்சியில் எப்படியெல்லாம் நெரிக்கப்படுகிறது என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையில்லை.

மதுவிலக்கு பற்றிப் பேசுவது தேசத் துரோகமாம்!விரிவாக ; https://t.co/NdDjbYxqUD— KalaignarKarunanidhi (@kalaignar89) April 3, 2016

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 47-வது பிரிவிலேயே "அரசு மது விலக்கைக் கொண்டு வரக் கட்டாயம் முயற்சி செய்ய வேண்டும்" என்று கட்டளையிடப்பட்டுள்ள நிலையில் மதுவிலக்கைப் பற்றிப் பேசுவதும், எழுதுவதும் எப்படிக் குற்றமாகும், எப்படி வழக்குப் பதிவு செய்ய முடியும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒருவேளை, நடைபெறுவது ஜெயலலிதாவின் ஆட்சி என்பதால், இந்த ஆட்சியில் மதுவிலக்கு மாநாடு நடத்துவதே குற்றமா?

இந்தியக் குற்றவியல் நடைமுறைகளிலிருந்து, "தேசத் துரோகம்" எனும் பிரிவையே நீக்க வேண்டும் என்று டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளுக்குப் பிறகு நாட்டில் பரவலாக விவாதம் நடந்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் அதிமுக தொடர்ந்து இவ்வாறு தேசத் துரோக வழக்குகளைத் தங்களுக்கு எதிராகக் கருத்து தெரிவிப்போர் மீதெல்லாம் பதிவு செய்து வருவதை வன்மையாகக் கண்டிப்பதோடு, அந்த வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி