ஆப்நகரம்

லாட்டரி அதிபா் மாா்ட்டினின் உதவியாளா் மா்ம மரணம்

லாட்டரி மார்ட்டினின் நிறுவனங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில் வருமான வரித்துறையின் விசாரணையில் இருந்த காசாளர் இன்று பிணமாக மீட்கப்பட்டாா்.

Samayam Tamil 3 May 2019, 11:28 pm
லாட்டரி மார்ட்டினின் நிறுவனங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில் வருமான வரித்துறையின் விசாரணையில் இருந்த காசாளர் இன்று பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Death Body


கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை பகுதியில் வசித்து வருபவர் பழனி (42). இவர் மார்ட்டினின் ஹோமியோபதி கல்லூரியில் காசாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த 30ம் தேதி தமிழகம் முழுவதும் மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனங்கள், வீடுகள், ரிசார்ட்டுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடைபெற்றது.

அதேபோல மார்ட்டின் நிறுவனங்களில் பணிபுரியும் நிர்வாகத்தினருடன் தொடர்புடைய முக்கிய நபர்களிடமும் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் குறிப்பாக கவுண்டம்பாளையம் அருகே உள்ள ஹோமியோபதி கல்லூரியில் பல்வேறு தரப்பினரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் குறிப்பாக காசாளர் பழனியை தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இன்று பழனியை விசாரணைகள் முடிந்து வருமான வரித்துறையினர் விடுவித்தனர். இந்த நிலையில் இன்று காரமடை காவல் எல்லைக்குட்பட்ட வெள்ளியங்காடு அருகே உள்ள குட்டையில் காசாளர் பழனி பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

வருமான வரித்துறையினர் சோதனையில் இருந்து இன்று விடுவிக்கப்பட்ட நிலையில் காசாளர் பழனி பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழனியின் மரணம் தொடர்பாக காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி