ஆப்நகரம்

கருணாநிதி பிறந்தநாள்: ஆடம்பரம் வேண்டாம்-மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

கொரோனா பரவல் காரணமாக கருணாநிதியின் பிறந்த நாளுக்கு ஆடம்பர நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Samayam Tamil 2 Jun 2020, 1:51 pm
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மறைந்த கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா ஜூன் 3ஆம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது. அவரது பிறாந்தநாள் விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கியும், ரத்த தானம் செய்தும் பல்வேறு வகைகளில் மாநிலம் முழுவதும் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்த நிலையில், கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் கருணாநிதியின் பிறந்தநாளை ஆடம்பரமின்றி திமுகவினர் கொண்டாட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நம் உயிருடன் கலந்திருக்கும் முத்தமிழறிஞர் கலைஞரின் 97வது பிறந்தநாளான நாளை (ஜூன் 3) அனைத்து மாவட்ட-ஒன்றிய-நகர- பகுதி - வட்ட - பேரூர் - கிளைக் கழக நிர்வாகிகள் அவரவர் இடங்களிலேயே தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கும் - திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திட வேண்டுகிறேன்” என கூறப்பட்டுள்ளது.

கொரோனா பரவலால், குறிப்பாக சென்னையில் தலைவர் கலைஞர் பிறந்தநாளுக்கான எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ள மு.க.ஸ்டாலின், கருணாநிதிக்கு தான் மரியாதை செலுத்தும் நிகழ்விலும் யாரும் அணிதிரண்டிட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேசமயம், நலத்திட்ட உதவிகளை திமுக நிர்வாகிகள் அவரவர் இடங்களிலிருந்தே சமூக ஒழுங்கினைக் கடைப்பிடித்து, உதவிகள் செய்து கலைஞர் கருணாநிதி புகழ் போற்றுவோம் எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி