ஆப்நகரம்

தமிழகத்தில் போராட்டங்களுக்கு உயர்நீதிமன்றம் தடை!

ஏப்ரல் 21ஆம் தேதி வரையில் தமிழகத்தில் போராட்டங்கள், ஊர்வலங்களை நடத்த அனுமதிக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 20 Mar 2020, 4:03 pm
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஏப்ரல் 21ஆம் தேதி வரை போராட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த அனுமதிக்கக்கூடாது என்று தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil தமிழகத்தில் போராட்டங்களுக்கு உயர்நீதிமன்றம் தடை


தமிழகத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி வரையில் போராட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்கள் நடத்த அனுமதி வழங்கக்கூடாது காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு பகுதியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இப்போராட்டங்கள் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுவதாகவும், அனுமதியில்லாமல் நடைபெறும் போராட்டங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இம்மனுக்கள் இன்று (மார்ச் 20) நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்கள் போராடுவது ஜனநாயக உரிமை எனவும், போராட்டங்களுக்கு தடை விதிக்கக்கூடாது எனவும் போராட்டங்களுக்கு ஆதரவாக மனுத்தாக்கல் செய்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர். தற்போது நடைபெறும் போராட்டங்களின் நிலை என்னவென்று காவல்துறை தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜனிடம் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

பெரும்பாலான இடங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும், சில இடங்களில் மட்டும் இன்னும் போராட்டங்கள் தொடர்வதாகவும் நடராஜன் பதிலளித்தார். அப்போது, கொரோனா தொற்று பரவுவதை தடுக்க பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கும்படி பொதுமக்களிடம் மத்திய, மாநில அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளதாகவும், இந்த அறிவுறுத்தல்களை சரியாக கடைப்பிடிக்க வேண்டுமெனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தற்போதைய நிலையில், பொது இடங்களில் அதிக கூட்டத்துடன் போராட்டங்கள், ஊர்வலங்கள், பேரணிகள் நடத்த ஏப்ரல் 21ஆம் தேதி வரை அனுமதிக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்ரல் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அடுத்த செய்தி