ஆப்நகரம்

இந்த மாதிரி பாலுறவு கொண்டால் தவறில்லை - போக்சோ சட்டத் திருத்தத்திற்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!

18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் செய்யும் பாலியல் குற்ற நடவடிக்கையில், போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

TIMESOFINDIA.COM 26 Apr 2019, 9:26 pm
குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு தண்டனை அளிக்கும் வகையில், கடந்த 2012ஆம் ஆண்டு போக்சோ சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
Samayam Tamil Chennai_High_Court


இதன்மூலம் சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், பாலியல் தொந்தரவு, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டால் மட்டுமே, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவர். இந்நிலையில் நாமக்கலைச் சேர்ந்த சபரிநாதன் என்பவர், மைனர் பெண்ணைக் கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் மீதான வழக்கு விசாரணையில், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சபரிநாதன் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணையில், மைனர் பெண்ணை சபரிநாதன் கடத்திச் செல்லவில்லை என்றும், தனது விருப்பத்தின் பேரிலேயே சிறுமி சென்றதும் தெரியவந்தது. 17 வயதான அந்த மைனர் பெண், சபரிநாதனை திருமணம் செய்து கொண்டு, 6 மாதங்கள் இல்லற வாழ்க்கை நடத்தியுள்ளார்.

இதனையறிந்த நீதிமன்றம் சபரிநாதனை விடுவித்து உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், சபரிநாதன் விவகாரத்தை கவனத்தில் கொண்டு போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர, தமிழ்நாடு அரசிற்கு சில ஆலோசனைகள் வழங்கினார்.

அதாவது, 16 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் பாலுறவு கொண்டால் அது குற்றமாக கருதப்படாது என்ற வகையில் திருத்தம் செய்ய அறிவுறுத்தினார். முக்கியமாக போக்சோ சட்டம் குறித்து பொதுமக்களிடம் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மது அருந்துதல், புகைப்பிடித்தல் ஆகியவற்றின் தீமைகள் குறித்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு செய்வது போல், போக்சோ சட்டம் குறித்தும் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கினார்.

அடுத்த செய்தி