ஆப்நகரம்

சட்டவிரோத மணல் குவாரிகள்: அபராதத்துடன் மனு தள்ளுபடி!

முறையாக உரிமம் பெற்று இயங்கும் மணல் குவாரிகளை, சட்டவிரோத மணல் குவாரிகள் எனக் கூறி, அவற்றை அகற்ற கோரி தொடரப்பட்ட வழக்கை 50 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Samayam Tamil 7 Aug 2022, 11:52 am
நாகப்பட்டினம் மாவட்டம், பெரும்கடம்பனூர், இளம் கடம்பனூர் மற்றும் சிரங்குடி புலியூர் ஆகிய கிராமங்களில் நடக்கும் சட்டவிரோத மணல் கொள்ளைகளை தடுத்து நிறுத்த கோரி பெரும்கடம்பனூர் கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு பிளீடர் ஆஜராகி, அந்த பகுதியில் செயல்படும் மணல் குவாரிகள் அனைத்தும் உரிமம் பெற்று செயல்பட்டு வருவதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், குவாரிகளை குத்தகைக்கு எடுத்துள்ளவர்களை மிரட்டும் வகையில், மனுதாரர் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளதாகவும், மனுதாரருக்கு எதிராக சட்டவிரோத மணல் குவாரி நடத்தியது உள்ளிட்ட குற்ற வழக்குகள் உள்ளதால் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், தன்மீது பொய்யான குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சுமத்தப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

குற்ற நோக்கம் இல்லாமல் 5க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடுவது சட்ட விரோதமல்ல - சென்னை ஐகோர்ட் கருத்து
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மணல் குவாரிகள் அனைத்தும் முறையான உரிமம் பெற்று செயல்படுகிறது என்பதும், சட்ட விரோதமாக எந்த குவாரிகளும் செயல்படவில்லை என்பதும் அரசு தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து தெரியவருவதாகவும், முறையாக விசாரிக்காமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி, மனுவை 50 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த அபராத தொகையை 15 நாட்களுக்குள் மாநில சட்டபணிகள் ஆணைய குழுவில் செலுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி