ஆப்நகரம்

தமிழக அரசின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!

தமிழக அரசின் தாய் சேய் நலப் பெட்டக டெண்டரை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Samayam Tamil 25 Jun 2022, 6:45 pm
அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு அடைந்த தாய்மார்களுக்கு தாய் சேய் நல ஊட்டச்சத்துப் பெட்டகத்தை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த திட்டத்திற்கான பொருட்களை சப்ளை செய்வதற்காக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குனர் மூலம் கடந்த பிப்ரவரி மாதத்தில் டெண்டர் கோரப்பட்டது.
Samayam Tamil தாய் சேய் நலப் பெட்டக டெண்டர்
தாய் சேய் நலப் பெட்டக டெண்டர்


அந்த டெண்டரில் பங்கேற்க 2018-19, 2019-20, 2020-21 ஆகிய மூன்று நிதியாண்டுகளில் 3 லட்சத்து 30 ஆயிரம் பெட்டகங்களை அரசு அல்லது அரசு அமைப்புகளுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சப்ளை செய்திருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யவில்லை என தஞ்சாவூரில் மாவட்டம் நாஞ்சிக்கோட்டையை சேர்ந்த ஸ்ரீ சாந்தி சர்ஜிக் கேர் என்ற நிறுவனத்தின் தொழில்நுட்ப டெண்டரை நிராகரித்து தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து அந்த நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு நிறுவனங்களுக்கு சப்ளை பண்ணவில்லை என்று கூறுவது தவறு, இந்திய தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு என்ற மத்திய அரசு நிறுவனத்திற்கு சப்ளை செய்திருப்பதாக மனுதாரர் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆருத்ரா கோல்டு வழக்கு: கைதுக்கு இடைக்காலத் தடை!
தமிழக அரசு தரப்பில், அந்த கூட்டமைப்பு என்பது கூட்டுறவு சங்கம் தானே தவிர அரசு நிறுவனம் கிடையாது என்றும், தொழில்நுட்ப டெண்டர் மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் முன்கூட்டியே தொடரப்பட்ட வழக்கு என்றும் தெரிவிக்கப்பட்டது. டெண்டர் ஒதுக்குவது அரசின் நிர்வாக முடிவு என்பதால், நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் சப்ளை செய்ததாக கூறப்படும் நிறுவனம் மத்திய அரசு நிறுவனமா இல்லையா என்பது குறித்து விசாரணை நடத்த முடியாது என்றும், அந்த நிறுவனம் அரசு அமைப்புதான் என்பதை நிரூபிப்பதற்கு எந்த ஆதாரங்களும் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். எனவே நிபந்தனையை பூர்த்தி செய்யப்படவில்லை என்பதால் டெண்டர் நிராகரித்த உத்தரவு சட்டவிரோதமானது அல்ல என கூறி, ஸ்ரீ சாந்தி சர்ஜிக் கேர் மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி